மருதாணி வைச்சகை மன்னனெனை மயக்கிடுமோ...? - கரவையூர் தயா...!!

 


ஒத்தையில நிற்கிறியே

ஒத்தையில நிற்கிறியே

ஒத்தையிலே நிற்கிறியே ஒளிவிளக்காய் மின்னுறியே

அத்தமகள் கற்பகமே அடிமனசை வருடுறியே

உத்தமியே உள்ளத்திலே உன்நினைப்பு கொல்லுதடி

முத்தழகே கிட்டவந்து முத்தமிடச் சொல்லுதடி !

அன்னநடை கொஞ்சுதடி அச்சுவெல்லப் பேச்சழகி

சின்னநடை கெஞ்சுதடி சிக்கனமா ஆடுதடி

பின்னலிட்ட கூந்தலிலே பிச்சிப்பூ மணக்குதடி

புன்னகையில் சொக்கிவிட்டேன் பொன்மகளே பூத்திடடி !

கால்கொலுசு மீட்டுமொலி காதலிலே கட்டிடுதே

வேல்விழியால் பார்க்கையிலே வேதனையும் ஓடிடுதே

பால்முகமும் வெண்ணிலவாய் பாங்காக ஒளிர்கிறதே

நூல்பிடித்து வரைந்தாற்போல் நுதலழகாய்த் தெரிகிறதே !

மருதாணி இட்டகை மன்னனெனை வளைத்திடுமோ

கருவேலங் காட்டுக்குள் கதைபேசிக் களித்திடவோ

குருத்தோலைப் பந்தலிட்டு குந்தவச்ச மச்சானிடம்

நெருப்பான வார்த்தைகளை நெஞ்சிலள்ளிக் கொட்டலாமோ ?

வாசலிலே கோலமிட்டு வரவேற்பு தந்திடடி

மீசைவச்ச அத்தானை வேகமாக கட்டிடடி

பேசவரும் போதினிலே பெண்ணழகே அச்சமேனோ

பாசமுடன் பையவந்து பனிமலரே பாட்டெழுது !

வாக்களிக்கும் வயசாச்சு வாக்கப்பட பயமெதற்கு

ஏக்கமுடன் காத்திருக்கேன் ஏமாற்றம் தரலாமோ

மூக்குத்தி போட்டவளே முடிவோட நானிருக்கேன்

ஊக்கமுடன் வாடிபுள்ள ஊரறிய தாலிகட்ட ....!!!



கரவையூர் தயா.

31.12.2021.

(மரபுவழி  - கிராமிய கவிதை).


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.