தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா...!!


ஒவ்வொரு விதைக்குள்ளும்
ஒரு காடிருக்கும் என்பார்கள்
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே
மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,

கவலை விடு, நம்பிக்கைக் கொள்
பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும்
அவச்சொல் அழி,
மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று உணர்;
உயிர்ச்சொல் கொண்டு
நெஞ்சுக்குள் அடைமழையென சூழும்
கண்ணீரை அகற்று, மரணத்தைச் சபி;

விழும் ஒரு சொட்டுக்கண்ணீர்
கடைசி விசும்பலின் சாட்சியென்று
சபதமெடு;
கைகோர்த்து நிற்கவோ தோள்புடைத்து எழவோ
எவரையும் தேடாதே;
உன்னால் மட்டுமே உன்னை உயிர்ப்பிக்கயியலும்;
நீ முயன்றெழுதலே
நீ பிறருக்கு செலுத்தும் முதல் நன்றி;

நீயும் நானும் வேறல்ல
நமக்குள் உயிர் ஒன்றுதான்
அதைப் பறிக்கும் பயத்தை முதலில் அடித்து விரட்டு
உயிர்க்குமொரு திமிரை உடம்புள் செறிந்து நிரப்பு
உன்னால் ஆனது உலகு, உன்னால்
எல்லாமாகும் நம்பு;

இப்பிரபஞ்சமெங்கும்
நிறைந்துக் கொள்
மரணத்திற்கு அடங்காத வாழ்வின்
கடைசி மூச்சை எடுத்துக் கொண்டு
ஒவ்வொரு அருகாமை மனிதரையும் தேடி ஓடு;
நீ பிணமல்ல என்று காட்டு;

இழுப்பதும் விடுவதும்
உன்னால் முடியும்போதே
திமிறி எழு;
ஒரு தீப்பிழம்பென மீண்டெழுந்து வா;
இந்த வாழ்க்கை
எல்லோருக்கும் பாடமாகட்டும்
வெற்று மரணமாக வேண்டாம் கேள்;

மாயும் மனிதர்களை
மருந்தும் காக்கவில்லை
மரணமும் தீண்டவில்லை; பயத்தில் மடிகிறார்கள்
பயம் ஓருயிரைக் கொல்லுமெனில்
நம்பிக்கை ஒரு உயிரைத் தேற்றாதா?
நம்பிக்கை ஒரு உயிரைக் காக்காதா?

அவன்
அவள்
எல்லாம் சேர்ந்து தான் நாம்
அது பாசத்தால் நெய்த வலை; ஆனால்
உயிர்க்குத் தெரிந்தது ஒன்று தான்; அது நீ;
அந்த நீ நினைத்தாலன்றி
இனி நமக்கு விடியலில்லை.

உன்னால் முடியும்
சாகமுடிபவர்களுக்கு வாழ முடியாதா யென்ன?
முடியும்.
ஒரு துளி காற்று;
ஒரு துளி நம்பிக்கை;
ஒரு துளி வேகம் மனதிற்குள் நிரப்பிக் கொண்டெழு;
துளித் துளியாய்
நம்மை நாம் சேர்த்துச் சேர்த்து
தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா;
வீழ்வது மரணம், அது எல்லோராலும் இயலும்
வாழ்வதே நீ; அது உன்னால் மட்டுமே முடியும்;
வாழ்ந்துகாட்டு!!




நன்றி - முத்துக்கமலம் பன்னாட்டு இணைய மின்னிதழ் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.