பூசையில் மண் மலர்கள்!!


மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலாக் காதல். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான்.

இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள்தானா? எனக் கூர்ந்து நோக்கினான்.

அவை மண் மலர்கள்தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.

கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்த போதும் அவ்வாறே நிகழ்ந்தது.

மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

பிறவிலேயே அவனுக்குக் கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்குக் கனவில் காட்டிப் பின்பு மறைந்து விட்டார்.

பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

பீமய்யாவும், தனக்குக் கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியேச் செய்தான். அதன் பின்னர், மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான்.

பிரதி வாரம் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயேத் தொழிலையும் செய்து வந்தான்.

இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான்.

அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாகப் பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது.

இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒரு நாள் அபூர்வக் கனவொன்றை கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, “தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையேத் தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும்” என்று கூறி மறைந்தார்.

தொண்டை மானும், திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான்.

அனுதினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களைச் செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன்.

உடன் பீமய்யாவை சென்று கட்டித்தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான். இதற்கிடையில் அந்த பரந்தாமன் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்து கொள்வேன் என கூறியிருந்தார்.

அதன்படியே தொண்டைமான், பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது.

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

                             நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ் 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.