தமிழர்களுடைய உயிர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியா? 


 காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர் என்பதுடன் தமிழர்களுடைய உயிர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியா? என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


காணாமல் போனோரின் உறவுகளுக்கு அரசினால் ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் யோசனையை நீதி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்தார். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் நீதி அமைச்சர் காணாமல் போனோர் தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த யோசனை ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற விடயமாகும் என்பதுடன் தமிழர்களை இவர்கள் எவ்வாறு எந்தளவுக்கு வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த நீதி அமைச்சர் வெளியிட்டிருப்பது ஒரு வேதனையான கவலையான விடயம்.

அதேவேளை தமிழர்களுடைய உயிர் ஒரு இலச்சம் ரூபா பெறுமதி என்ற அடிப்படையில் இவர்கள் கையாளுகின்ற விடயத்திற்கு நான் மனவேதனையுடன் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் அது தொடர்பாக எந்த விதமான நியாயமான ஒரு விடயங்களையும் கையாள்வதற்கு தயாரில்லை என்ற அடிப்படையில் உள்ளது.

இந்நிலையில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எமது உறவுகள் நீண்டகாலமாக அவர்களது நியாயங்களை பெற்றுத்தரவேண்டும் என சர்வதேசத்தை கோரி வருகின்றனர். இவ்வாறு சர்வதேசத்தை கோரிவரும் இந்த கால கட்டத்தில் இந்த நீதி அமைச்சர் முன்வைத்திருக்கின்ற விடயம் எமது தமிழினத்தை மிக மோசமாக இந்த அரசாங்கம் கையாளுகின்ற விடயத்தை இதன் மூலமாக எடுத்துரைத்துள்ளனர்.

காணாமல் போன உறவுகள் மற்றும் மனித உயிர்களை பறிகொடுத்த சமூகத்தை மோசமான ஒரு சூழலுக்கு இட்டுச்செல்லும் என்பதுடன் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு மனித நேயத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதை காட்டுகின்றது.

எனவே இவ்வாறு நாட்டில் ஒரு நீதி அமைச்சர் ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற விடயமாக செயற்படுகின்ற நடவடிக்கையை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்தார்.

-நிருபர் சரவணன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.