ரஞ்சன் ஒப்புக்கொண்டார்குற்றத்தை!

 


தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள 2 ஆவது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது முறைப்பாடு இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடு நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, எல்.டி. பி. தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போதே ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

ரஞ்சன் ராமநாயக்க இந்த குற்றச்சாட்டுக்களில் தான் நிரபராதி என்று முன்னர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு இன்று அழைக்கப்பட்ட போது, ​​ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட, தனது கட்சிக்காரர் தான் நிரபராதி என முன்னர் தெரிவித்திருந்ததை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கும் குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

அதனையடுத்து, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ரஞ்சன் ராமநாயக்கவை அழைத்து இது குறித்து விசாரித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தான் நிரபராதி என முன்னர் தன்னால் தெரிவிக்கப்பட்ட கூற்றை திரும்பப் பெறுவதாகவும், குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.