ரஷ்ய இராணுவத்தினரை ஓட வைத்த உக்ரைன் விவசாயி

 


உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷ்ய இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து, உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

இதற்கு உக்ரைன் இராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கிவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை தனது உழவு இயந்திரத்தில் இணைத்து இழுத்து திருடி சென்றார்.

இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது உழவு இயந்திரத்தில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறுகையில், “இந்த வீடியோவின் மூலம் ரஷ்யா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை.

உக்ரைன் நாட்டு உழவு இயந்திரம், ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது” என்றார். இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

அவர் கூறுகையில், “உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள்” எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.