சீன-அமெரிக்க போட்டியில் தமிழீழ மக்கள் யார் பக்கம் நிற்கவேண்டும்?


 சீன-அமெரிக்க போட்டியில் தமிழீழ மக்கள் யார் பக்கம் நிற்கவேண்டும்? மில்லியன் டொலர் கேள்வி!


இனிவரும் 50 ஆண்டுகளில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீன-அமெரிக்க போட்டி கடும் இறுக்கமடைவதை யாராலும் தடுக்கமுடியாது.


இந்த சீன- அமெரிக்க போட்டியில் இலங்கையும் சிக்குண்டுள்ளது. 


இதில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும் என்ற ஒரு கேள்வி இயல்பாகவே எழுகிறது. 


புவிசார் நலன்,போரியல் பார்வையினூடாக எப்படி உலக ஒழுங்கின் இந்த சதுரங்க ஆட்டத்தை அணுகவேண்டும் என்பதை விளக்க முனைவதே இந்த பதிவு.


சீன-அமெரிக்க போட்டியில் வெறுமனே இலங்கை மட்டும் சம்பந்தப்படவில்லை. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. இதில் QUAD,AUKUS, Australia-India-Japan Strategic Triangle போன்ற பல பக்கங்கள் உண்டு.

 

 அந்த பக்கங்களை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை பக்கத்தை மட்டும் எடுத்திருக்கிறோம்.

 

அப்பொழுதுதான் இந்த சதுரங்க ஆட்டத்தை எளிமையாக உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.


• இந்த சதுரங்க ஆட்டத்தின் ஆட்டக்காரர்கள் யார்?


தமிழீழ பிரச்சினையை பொறுத்தவரை, 2009 வரை இந்த சதுரங்க ஆட்டத்தில் மூன்று தரப்பு பிரதான ஆட்டக்கார்களாக இருந்தார்கள்.


1. தமிழீழ விடுதலை புலிகள்

2. இலங்கை

3. இந்தியா 


இடைக்கிடையே மேற்குலகும் பங்குபற்றியது.


விடுதலை புலிகள் களத்தில் இருந்தவரை, இந்த சதுரங்க ஆட்டத்தில் தமிழர்களுக்கு எது வேண்டும் என்பதை ஆணித்தரமாக கேட்கக்கூடிய வகையில் இருந்தார்கள். மற்றைய ஆட்டக்காரர்கள் விடுதலை புலிகளை புறக்கணிக்க முடியாதவகையில் புலிகள் தங்களது இராணுவ ஆற்றலை வைத்திருந்தார்கள். 


•2009 இற்கு பிறகு


2009 இற்கு பிறகு, இந்த சதுரங்க ஆட்டத்தில் தமிழீழ மக்களிடமிருந்து ஆட்டக்காரர் என்ற பதவி பிடுங்கப்பட்டு அகற்றப்பட்டாகிவிட்டது. இன்று இந்த சதுரங்க ஆட்டத்தை பொறுத்தவரை தமிழீழ மக்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே. 


அப்படியானால் இன்று இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடும் ஆட்டக்கார்கள் யார்?


1. அமெரிக்கா

2. இந்தியா

3. சீனா

4. இலங்கை 


தமிழீழ மக்கள் பார்வையாளர் மட்டுமே. ஆட்டக்காரர் அல்ல.


இனி ஒவ்வொரு ஆட்டக்காரர்களின் அணுகுமுறையும் எப்படியிருக்கும் என்பதை வரிசையாக பார்ப்போம்.


• அதற்கு முன் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஆட்டவிதி


“There are no permanent friends or enemies but permanent interests in international relations.


இந்த உலக ஒழுங்கின் சதுரங்க ஆட்டத்தில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. நமது நலன் மட்டுமே என்றுமே நிரந்தரமானது. ஒவ்வொரு நகர்வும் நமது நலனை நோக்கியதாகவே இருக்கவேண்டும்.”


உலக ஒழுங்கின் சகல ஆட்டக்காரர்களும் இதை மனதில் வைத்து மட்டும்தான் இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடுகிறார்கள். 


தமிழர்கள் நாங்கள் குறுக்கே பாய்ந்து, கண்ணீர் கசிந்து, அறம், உயிர்நேயம் என டயலாக் பேசிக்கொண்டிருந்தால் உலக ஒழுங்கு உங்களை பார்த்து சிரித்துவிட்டு கடந்துபோய்விடும்.


இந்த சதுரங்க ஆட்டத்தின் விதியை உங்களால் மாற்றமுடியாது. பல நூற்றாண்டுகளாக இந்த சதுரங்க ஆட்டம் இப்படித்தான் ஆடப்படுகிறது.


• அமெரிக்கா 


அமெரிக்காவின் மூலோபாயம் என்பது என்ன?

அமெரிக்காவின் மூலோபாயம் ( Grand Strategy) என்பது எப்போழுதுமே ஒன்றுதான்.


The central aim of U.S grand strategy is to preserve its current position for as long as possible.


அதாவது உலகின் super power என்ற அதனது நிலையை தக்கவைத்தல்.


அதன்படி அமெரிக்காவின் super power நிலையை அசைக்ககூடிய வகையில் சீனா வளருவதை அமெரிக்கா அனுமதிக்காது.


சீனா வளருவதை தடுப்பதற்காக உதவகூடிய சகல நாடுகளையுமே அமெரிக்கா தனது நண்பனாகவே அணுகும்.


அதேபோல் அதற்கு எதிர்நிலையில் இருக்கும் நாடுகளை எதிரியாக அணுகும்.


• சீனா


சீனாவிற்கு Malacca Dilemma என்ற சிக்கல் இருக்கிறது.


அதன் தொடர்ச்சியாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை முற்றிலும் அகற்றிவிட சீனா முயற்சிக்கிறது.


இதிலிருந்து மீள்வதற்கான சீனாவின் பல நகர்வுகளில் ஒன்றுதான் String of Pearls.


இந்து மா சமுத்திரத்தில் தனக்கான நட்புநாடுகளை உருவாக்கி, அங்கு துறைமுகங்களை கட்டுகிறது.அந்த துறைமுகங்கள் சீனாவின் கடற்படை தேவைக்கும் பயன்படக்கூடியவாறே கட்டப்படுகிறது (dual-use port projects). 


இந்த புள்ளியில்தான் இலங்கையும் வருகிறது.


சீனாவின் முத்துமணி் மாலையில் (String of Pearls) இலங்கையும் ஒரு முத்துமணி.


• இந்தியா


சோவியத்-அமெரிக்கா Cold War காலகட்டங்களில் இலங்கை அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து இருந்தது. 


இலங்கையை இந்தியாவின் செல்வாக்கிற்குள் கொண்டுவருவதற்காக, 1980 களில் உருவான தமிழ் போராளி இயக்கங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்தது.


இதன் மூலம் இந்தியா சொன்ன செய்தி இதுதான். தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கை எடுத்தால், இலங்கையில் உருவான ஆயுத போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உனக்கு தலைவலி தருவேன்.


அதேநேரம் இலங்கையில் தமிழீழம் உருவாக இந்தியா அனுமதிக்காது. ஏன் இலங்கையில் தமிழீழம் உருவாக அனுமதிக்காது என்பது தனியாக எழுத வேண்டிய கட்டுரை.


அதன்பின்னர் நடந்ததெல்லாம் நீங்கள்  அனைவரும் அறிந்ததுதான்.


இன்றைய சீனா-அமெரிக்க போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இது தெற்காசிய பிராந்தியத்தில் வேறொரு பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.


ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவை அகற்ற முயல்கிறது. அமெரிக்கா பல நாடுகளை கொண்ட கூட்டணியை உருவாக்கி containment strategy எனும் எதிர் நகர்வை செய்கிறது.


இந்த அமெரிக்காவின் எதிர் நகர்வில் மிக முக்கியமான நண்பர்கள் இந்தியாவும்,ஜப்பானும்.


ஆசியாவின் இரு பெரும் பொருளாதாரங்களை,இராணுவ வலிமையை கொண்ட நாடுகள்.


சீனா அமெரிக்காவிற்கு எதிரான நகர்வுகளை செய்யும்போது, இந்தியாவிற்கும் ஐப்பானிற்கும் எதிரான நகர்வுகளை செய்யவேண்டியது அவசியம்.


இந்தியாவும் சீனாவிற்கு எதிரான நகர்வுகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.


தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சிறுநாடுகளை அதனது செல்வாக்கிற்குள் வைத்திருக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருக்கிறது.


• இலங்கையில் மூக்கை நுழைக்க இந்தியாவிற்கு இருக்கும் ஒரே வழி


இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தனது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ்மக்களின் தொப்புள்கொடி உறவாக இருப்பதால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் தார்மீக உரிமை தனக்கு இருப்பதாக வழமைபோல இந்தியா இந்த பிட்டை போடும்.


இந்த ஒரு காரணத்தை காட்டி மட்டுமே இந்தியாவால் நேரடியாக இலங்கையில் தலையிடமுடியும். அதை தவிர்த்து இந்தியா மூக்கை நுழைக்க வேறு வழி கிடையாது.


ஆக எப்பொழுதெல்லாம் இலங்கை தன் கையை விட்டு மீறிபோகிறதோ, அப்பொழுதெல்லாம் இந்தியாவிற்கு தமிழர் நலன் மீது ‘திடீர் அன்பு’ வரும். அக்கறை பொங்கிப் பிரவாகம் எடுக்கும்.  


இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் இந்தியாவின் இந்த  ‘திடீர் திடீர் அன்பு மழையில்’ நனைந்து பதிலுக்கு அன்பு மழையை பொழிந்தால் அது எங்களின் முட்டாள்த்தனம். நாங்கள் உலக ஒழுங்கின் சதுரங்க ஆட்டத்தை ஆடுவதற்கு லாயக்கில்லாத இனம் என்று அர்த்தம்.


• இலங்கை


இலங்கையின் ராஜதந்திர நகர்வு என்பது சீன-அமெரிக்க போட்டியில் இரு தரப்புக்கும் நண்பனாக இருந்து தப்பிக்க நினைத்தது.


போனவருடம் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் Secretary of State ஆன Mike Pompeo சொன்னதை இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.


“Sri Lanka Will Soon Have to Pick a Side in the China-US Rivalry”


சீன-அமெரிக்க போட்டியில் இலங்கை தான் யார் பக்கம் என்பதை முடிவு செய்யவேண்டும் என்று Mike Pompeo கூறினார்.


மேலே குறிப்பிட்டது போல, 2009 இற்கு பிறகு தமிழீழ மக்கள் இந்த சதுரங்க ஆட்டத்தில் ஆட்டக்காரர் என்ற பதவியை இழந்துவிட்டார்கள்.


 இப்பொழுது வெறும் பார்வையாளர் மட்டுமே.


• இப்பொழுது தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?


மேலே குறிப்பிட்ட நான்கு ஆட்டக்காரர்களும்  தங்களுக்குள் மோதி கொள்ளட்டும். நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும்.


ஏனெனில் தமிழீழ மக்கள் இந்த சீன-அமெரிக்க போட்டியில் இழப்பதற்கு ஒன்றுமில்லை.


இந்த போட்டியில் சீன,அமெரிக்க,இந்திய நலன்கள் At Stake. 


அதாவது யார் இந்த போட்டியில் தோற்றாலும் அவர்களின் நலன்கள்தான் பாதிப்படையுமே தவிர தமிழீழ மக்களின் நலன் அல்ல.


2009 இல் விடுதலை புலிகள் களத்தை விட்டு நீங்கிய பிறகு, தமிழீழ மக்கள்  தமிழீழ விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு முன்பிருந்த காலத்திற்கு (Pre- Ltte Era) போயிருக்கிறார்கள். அவ்வளவுதான்.


மேலே குறிப்பிட்டது போல, இந்த போட்டியில் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான தனது நகர்விற்கு உதவுகிற நாடுகளை நண்பனாக அணுகும். அதற்கு எதிராக உள்ள நாடுகளை எதிரியாக அணுகும்.


ஏதோ ஒரு புள்ளியில் இலங்கையை எதிரியாக அணுகவேண்டிய நிலை அமெரிக்காவிற்கு தோன்றலாம். சிலவேளை தோன்றாமல் கூட போகலாம்.


ஒருவேளை இலங்கையை எதிரியாக அணுகவேண்டிய நிலை அமெரிக்காவிற்கு தோன்றினால், அவர்களாகவே உங்களிடம் வருவார்கள். 


இந்தியாவும் பம்மிக்கொண்டு அமெரிக்காவின் பின்னால் வரலாம்.


ஆனால் தமிழீழ மக்கள் தாங்களாகவே முட்டாள்தனமாக முந்திக்கொண்டு போய் ‘இந்தியா எனக்கு தந்தை தேசம் முந்திரி தேசம்’ என்ற சென்டிமென்ட் பாட்டெல்லாம் பாடக்கூடாது.


தமிழ்நாட்டு தமிழ்மக்கள் மட்டும்தான் தமிழீழ தமிழர்களின் நண்பனே ஒழிய இந்தியா தமிழீழ தமிழர்களின் நண்பன் அல்ல.


உலக ஒழுங்கின் ஆட்டவிதியை திரும்பவும் ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள்.


There are no permanent friends or enemies but permanent interests in international relations.


மேலேயுள்ள எந்தவொரு ஆட்டக்காரர்களும் உங்களின் மேல் இரக்கம் கொண்டு உங்களை ரட்சிக்க வரப்போவதில்லை.


அவர்களின் நலனுக்கு நீங்கள் தேவையென்பதால் அவர்கள் உங்களை நோக்கி வருவார்கள்.


ஏனெனில் அவர்களின் நலன்தான் At Stake.


தமிழீழ மக்கள் செய்யவேண்டியது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது.


ஏனெனில் எமது நலன் சார்ந்து சீன-அமெரிக்க போட்டியில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இந்த சதுரங்க ஆட்டத்தில் நாங்கள் இல்லேங்கோ..... மாறாக  தமிழீழ மக்கள் மீண்டும் இந்த ஆட்டத்தில் நாயகர்களாக வேண்டுமானால்  2009 மே 18 இல் உலகிற்கு வழங்கப்பட்ட செய்தி மீளப்பெறப்படவேண்டும். அந்தச் செய்தி என்ன நாங்கள் எமது ஆயுதங்களை மௌனித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.