உரிமைக்குரல் உயர்ந்து ஒலிக்கும் தினம்!

 


வானம் முழுக்க மழை மேகம்

நிலம் நிறைந்து கிடக்கும்  ஈரம் 

வரம்பேறி நடை பயிலும் நீரமுதம் 

நிறைந்து நிறைவு சொல்லும் உயர் காலம் 

ஆனால் விடை பெறாத காலமாய் விரிந்து 

நொந்து கிடக்கிறது தொழிலாளர் சமூகம் 


விலை மதிப்பற்ற எங்கள் உதிரம் 

விளை நிலமாய் உதிரும் கொடூரம் 

தேன் குடிக்கும் ஈக்கள் கூட்டம் 

ஊர் முழுக்க மொய்த்திருக்க  

உயிர் வாழ தீனி கேட்டு - உரிமைக்காய்

இரைஞ்சும் ஏக்கம். 


எங்கள் கரங்கள் தேய்ந்து

என்புகள் பாழடைந்து

தேகமே புண்ணாக்கப்பட்டுவிட்டது 

நாங்கள் இப்போது சாவுக்காய்

தேம்பித் தேம்பி அழுது கிடக்கிறோம்


எங்கள் வீட்டு கூரைகளில்

ஊடுருவும் நட்சத்திரங்கள் கூட

வெளிப்பற்று இருட்டுக்குள் - ஒளிக்காய்

துடிப்பற்று கிடக்கிறது. 


எங்கள் இதயங்கள்

இரும்புக் கம்பிகளால் பிணைக்கப்பட்டு 

விலக முடியாத வியூகமாய் 

விசாலித்துப் போய் கிடக்கிறது. 


நாங்கள் கத்தரித்து சோடிக்கப்பட்டு 

மனிதனுக்காக மனிதனால் 

மின் மெழுகு முலாம் பூசி

நிமிர்ந்தெழுந்த ரோபோக்களல்ல


உங்களால் திருகப்படும்

திசைகளில் ஆட நாமெல்லாம்

சுருள்கள் நிறைந்த - உங்க வீட்டுச் 

சிறுமிகளின் விளையாட்டு பொம்மைகளல்ல


வெடித்த கொப்பளங்கள்

வடிக்கும் சீள்கள் குடித்து

ஏப்பமிடும் உங்கள் சுரண்டல் -பசிக்கு

நாங்கள் இத்தாலிய பிக்‌ஷாக்களுமல்ல


எங்கள் கைகளைப் பாருங்கள் 

புண்ணாகி கிடக்கும் 

கறுத்த வெண்கரங்களைப் பாருங்கள் 

உங்களுக்காக இரும்புத் துண்டுகளோடு 

தினமும் சண்டை போடும் எங்கள் 

கைகளைப் பாருங்கள் 


உங்களின் வெண்நிற கரங்கள் 

பூத்த பூக்களாக மென்மையோடு 

மணம் வீச 

நாங்கள் எங்கள் கரங்களை 

இரும்பாக்கிய கொடுமையான 

நிமிடங்களை கொஞ்சம் உற்றுப் பாருங்கள் 


வயலிலே வரப்புயர நீர் மறித்து 

பிக்சாக்களுக்காக கோதுமையைத் தரும் 

உழைத்துத் தேய்ந்து கசங்கிப் போன 

காகிதத் துண்டுகள் நாங்கள் 


உங்களைக் கேட்கிறோம்

உங்களைத் தான் கேட்கிறோம் 

ஒரு நிமிடம் நின்று கேளுங்கள் 

எங்களை கொஞ்சம் வாழ்விடுங்கள் 

முதலாளிகள் என்று உங்கள் வாழ்வுக்காக 

எங்கள் வாழ்வை அரிக்காதீர்கள் 


நாங்கள் நடந்த பாதைகளில்

இருக்கும் முட்களை பார்க்காது 

புற்களை வளர்த்து சிரிக்கும் - உங்கள்

கொடூரங்களை விட்டுவிடுங்கள்


லெனின் கண்ட கனவின்

உடைசல்களையாவது எங்கள்

வலிகள் மாற்றும் - புது

மருந்தாக மாற்றுங்கள்


வாழ விடுங்கள் எங்கள்

 உடலை உண்டு விட்டு

கருகிய கரை என்றெண்ணி 

உங்கள் வீட்டுத் தங்க குப்பைக் கூடையில் வீசாதீர்கள் 


உயிருள்ள, உரிமையுள்ள,

உணர்வுள்ள மானிடர்கள் நாம்

எம்முடல் நரம்புகளால் - நன்று

கட்டப்பட்ட இரத்த கூடு.

அதனால் தான் கொஞ்சம் 

வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 


நெடிய வளர்ந்த மரங்களின்

வேர்களிடையே நாங்கள் பதுங்க

ஆசை கொள்ளவில்லை 

அதேநேரம் 

கதிர்கள் சிந்தி உயரம் தொட்டு மிளிரும் 

வண்ணாத்திகளாக பறக்கவும் ஆசைப்படவில்லை 


சிறு மரமாகவே துளிர்க்க விரும்புகிறோம்

அதையே எங்கள் நெஞ்சக் குழிகள் தினமும் நேசிக்கின்றன 

இதைத் தான் உங்களிடம் கேட்கிறோம் ஒரு நிமிடம் நின்று கேட்டுவிட்டுச் செல்லுங்கள். 


படர்ந்து பரந்து விரியும் சூரிய ஒளியை

எம்மிடமிருந்து பறித்து எம்மை

முடக்கி விடாதீர்கள் 


எங்களை கொஞ்சமேனும் முயல விடுங்கள் 

நாமும் முளைவிட்டு நிமிர்கிறோம். 


எங்கள் மீது பூசப்பட்ட முதலாளித்துவ

சேற்றை கழுவ விடுங்கள்

நாங்கள் நாங்களாகவே - நிமிர்ந்து

மனிதர்களாக வாழ்கிறோம்


இன்று மேதினம் இன்று மேதினம் 

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்குரல் 

உயர்ந்து ஒலிக்கும் தினம் 

உங்களை கெஞ்சிக் கெஞ்சி தவித்தது போதுமென்று 

மிஞ்சி எழுந்த உரிமைத்தினம் 


இன்று போலவே 

இன்னும் ஒரு மே வரும் 

உங்களிடம் உரிமை கேட்கும் நாள் 

மீண்டும் ஒன்று புதிதாய்ப் பிறக்கும் 

அன்றும் இன்றுபோலவே 

அமைதியாய் ஓர் நாள் விடுப்புக்கு 

அனுமதி தந்து பணிக் கொடுப்பனவை புடுங்கி கொள்வீர்.


மறுநாள் எம்மில் ஊறும் - தேன்

குடிக்க காத்திருபீர்

நாமும் ஊற்றெடுக்கும் வியர்வையை

துகிலுரித்து குருதி சிந்தி கிடப்போம்


நீங்கள் மலர்ந்து காய்த்து பழமாகி

விதையாகி மீண்டும் முளைத்து....

எங்கள் ஈரத்தை உறிஞ்சி - உச்சமாய்

நெடிந்துயர்ந்து செல்வீர்கள்.


நாங்கள் எங்கள் வியர்வையை

பரிசாக்கி காய்ந்த கரங்களின்

புண்களுக்கு மருந்தாக எங்கள்

மண்ணை மட்டுமே பற்றி கொள்வோம்...


எழுதியது : இ.இ.கவிமகன்

நாள்: 01.05.2022

பதிவிட்டது : காலை 08.26

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.