மேமாதம் காயல் நிலத்திலை கண்ணீரோட செந்நீர் ஓடினதெல்லே- உரையாடல்!!
மேமாதம்….
அது ஒரு பத்திரிகை அலுவலகம் . மதிய உணவுக்காக எல்லோரும் சென்றுவிட செவ்வந்தியும் நாதினியும் மட்டும் வேலையில் மூழ்கியிருந்தனர். எழுதிக்கொண்டிருந்த கட்டுரையை முடித்துவிட்டு நிமிர்ந்த நாதினி அருகில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த செவ்வந்தியிடம் பேச்சு கொடுக்கின்றாள். அவர்களின் உரையாடல் இங்கு உங்களுக்காகவும்......
நாதினி : செவ்வி, ...முடிஞ்சுதா...சாப்பிடுற நேரம்....வா….போவம்….
செவ்வந்தி : ஓமக்கா...முடிஞ்சுது, ஆனால் சாப்பிடத்தான் மனமில்லை.
நாதினி : ஏன்....சாப்பிடாமல் என்ன செய்யப்போகிறாய், ஏதாவது பிரச்சினையா?
செவ்வந்தி : பிரச்சினை என்னக்கா....நாட்டு நிலைமையை நினைச்சால்தான் மனம் கனக்கிறது. ...நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரச்சினை.
நாதினி : அது சரிதான்....ஒருமாதிரி புதுப்பிரதமர் வரவு....சாமான் சட்டுகள் விலைகுறையும் என்று பார்த்தால் கடையில இன்னும் விலைகூடும் என்று சொன்னதைக் கேட்டதும் பயமாகிப் போட்டுது.
செவ்வந்தி : ஓமக்கா....புதுப்பிரதமருக்கு என்ன அமோக வரவேற்பா? பலபேரின்ர எதிர்ப்புகளோடதான் அவரும் வந்திருக்கிறார்.
நாதினி : அவருக்குப்பதில் இவர்....அப்பிடித்தானே நிறையப்பேர் சொல்லுகினம்...
செவ்வந்தி : ஓமக்கா...உந்தப்படம் உங்க நிறையப் பேரிட்ட சுத்துது...நானும் பாத்தனான்…நல்லா அடிச்சிட்டு அவர் போட்டார்….இவரிலையும் அவன்காட் வழக்கு இருக்கு போல…
நாதினி : நேற்று பேருந்துக்கு நிக்கேக்க …பக்கத்தில சில உத்தியோகத்தர்மார் நிண்டவை….மகிந்தவின்ர மகன்மாருக்கு முழு வெளிநாட்டிலையும் பெரிய பெரிய வியாபாரங்கள் இருக்குதாம்…அதோட , உந்த திரைப்படத்துறையிலையும் நிறைய முதலீடு செய்திருக்கினமாம்…அது ஏனெண்டு உனக்கு விளங்குதுதானே….அவையள் கதைச்சதைக்கேட்க எனக்கு அதை உடனே எழுதவேணும் போல இருந்தது. இண்டைக்கு எழுதின கட்டுரை அதை வைச்சுத்தான்…
செவ்வந்தி : ஓமக்கா….விளங்குது..விளங்குது…அவைக்கு நீங்கள் பத்திரிகை பணியாளர் எண்டு தெரியாது போல….பத்திரிகை பணியாளனுக்கு எல்லாம் கருதானே….அதுலையும் இது முக்கியமான கரு, நீங்கள் விடுவியளே….
நாதினி : ஓம்..செவ்வி, இப்ப இன்னுமொரு விசயமும் ஓடுது, பாத்தனியே, ?
செவ்வந்தி : என்ன விசயமக்கா….?
நாதினி : முள்ளிவாய்க்கால் தினத்தில புலிகள் தாக்குதல் நடத்த திட்டமாம்…இதை இந்து நாளிதழ் வெளியிட்டிருக்குதாம்….
செவ்வந்தி : அட நாசத்தை….பதின்மூண்டு வருசமாப்போச்சு, இன்னும் புலிப்பூச்சாண்டி ஓயேல்ல…..இந்தியா எங்களை ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டுது போல….உவர் சுப்பிரமணியம் சுவாமியின்ர வேலையாத்தான் இருக்கும். இல்லாட்டி , மகிந்தவைக் காப்பாத்த நடத்துற நாடகமோ,?
நாதினி : அதிலையும் இந்திய கடலோர காவல்படை தீவிர ரோந்துப்பணியிலையாம்….
செவ்வந்தி : அடிசக்கை…..முள்ளிவாக்கால் நினைவு தினத்திலை ஒரு இப்பிடி ஒரு கதை கிளப்பிவிட்டிருக்கினம் போல…..
நாதினி : எங்கட சனத்துக்கு இப்ப எல்லாம் நல்லா விளங்கிப்போச்சுது, நாங்கள் அமைதியாத்தான் இருப்பம்,
செவ்வந்தி : அக்கா …தம்பியின்ர சினேகிதங்கள் நேற்று கதைச்சுக்கொண்டிருக்கினம், எரிச்ச அரசியல்வாதிகளின்ர வீடுகளிலை எல்லாம் லட்சக்கணக்கிலை பெறுமதியான நாய்கள் தான் நிண்டதாம்….
நாதினி : அதுதானே நாங்கள் இப்ப தெருவில நிக்கிறம், அத்தியாவசிய உணவு கூட இல்லை, எத்தினை வீடுகள் பட்டினியில கொதிக்குது தெரியுமே,
செவ்வந்தி : அரசியல்ல எல்லாரும் அடிக்கிறது தான்..ஆனால் இவையள் ஓவரா அடிச்சிட்டினம்….அதுதான் இப்பிடி மாட்டுப்பட்டது.
நாதினி : சொந்த நாட்டையே சுடுகாடாக்கின பலன் ராஜபக்ச குடும்பத்தைத்தான் சேரும்…வினை விதைச்சால்…
செவ்வந்தி : அக்கா….அண்டைக்கு எங்களுக்கு..இண்டைக்கு அவையளுக்கு…எரிஞ்சு கிடந்த வீடுகளைப் பாக்க சுப்பர் சொனிக், புக்காரா அடிச்சு எங்கட வீடுகள் எரிஞ்சதுதான் நினைவில வருகுது. கொத்துக் குண்டுகளை இப்ப நினைச்சாலும் குலை நடுங்குதெல்லே….காயல் நிலத்திலை கண்ணீரோட செந்நீர் ஓடினதெல்லே….இப்ப என்ன மாதம் பாத்தியளே….
நாதினி : ஓமோம்…அதை நினைச்சா நித்திரையும் வராது…. சாப்பிட மனமில்லை….தலையும் இடிக்கிது,..வா…. முகம் கழுவிப்போட்டு கடையில இஞ்சி தேனீர் குடிச்சிட்டு வருவம்…
இருவரும் எழுந்து நடக்கின்றனர்.
ஆக்கம்
கோபிகா
யாழ்ப்பாணம்
15,05,2022
கருத்துகள் இல்லை