வவுனியா எரிபொருள் நிலையத்திற்கு படையினர் வரவழைப்பு!


வவுனியா எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாதுகாப்பு பிரிவினர் வரழைக்கப்பட்டிருந்தனர்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் என்பன நிறைவடைந்தாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வைத்திருந்த பெட்ரோலில் 20 லீற்றர் பெட்ரோல் பீப்பாயில் நிறைக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டதை அவதானித்த பொதுமக்கள் தமக்கும் எரிபொருள் வழங்குமாறு கோரியுள்ளனர்.

எனினும் அத்தியாவசிய தேவைக்காகச் சேமிப்பிலுள்ள எரிபொருளை வழங்க முடியாது என ஊழியர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் கலந்துரையாடி தனியாருக்கு வழங்கிய 20 லீற்றர் பெட்ரோலை படையினர் கையகப்படுத்தி , அதனை எரிபொருள் சேமிப்பு தாங்கியினுள் மீளச் செலுத்தினர்.

அதன் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்களை அங்கிருந்து பொலிஸார் அகற்றினர். மேலும் அத்தியாவசிய தேவைக்காகச் சேமிப்பில் இருக்கும் எரிபொருளைத் தனியாருக்கு வழங்க வேண்டாம் என எரிபொருள் நிலையத்தினருக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

அதேசமயம் சம்பவத்தை அடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் 15 இராணுவத்தினர், 10 பொலிஸார் 2 விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.