'21' க்கு பிரதமர் ரணில் விளக்கம்!!


நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே 21ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விடயத்தில் நேரம் மற்றும் வழிமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


புதிய அரசமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று  மாலை விசேட உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:-


"அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்கி, நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.


இதனால் பொருளாதார நெருக்கடியைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் செயற்படவில்லை.


தற்போதைய நிலைமையில், நாடாளுமன்றத்தின் கட்டமைப்பை மாற்றி, தற்போதுள்ள நாடாளுமன்ற முறை அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் முறை மற்றும் அரசமைப்பு முறை ஆகியவற்றை இணைத்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றம் நாட்டை ஆள்வதில் பங்கேற்கலாம்.


நிதி அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் நாடாளுமன்றத்துக்கு அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.


ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாங்கள் வலுவான மற்றும் சக்திவாய்ந்த சட்டத்தை முன்மொழிகின்றோம்.


தற்போது அரச நிதி தொடர்பாக மூன்று குழுக்கள் உள்ளன. பொது நிதிக் குழு, கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு ஆகிய மூன்று குழுக்கள் ஆகும். இந்த மூன்று குழுக்களின் அதிகாரங்களைப்  பலப்படுத்துவதற்காக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பல யோசனைகளை முன்வைத்துள்ளார். மேலதிகமாக அதற்கு நாங்களும் பரிந்துரைகளை முன்வைக்கின்றோம்.


நிதி விவகாரங்கள் தொடர்பாக இரண்டு புதிய குழுக்களை அமைக்க நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சட்ட மற்றும் வழிமுறைக் குழுவை நியமிப்போம்.


இரண்டாவதாக, நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி நிலை. பலவீனமான பிரச்சினைகள் பல இதில் உள்ளன.


எங்களின் நிலையியல் கட்டளை 111 இன் கீழ் நாம் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க முடியும். இதற்கு முன் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, பத்து மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க நாங்கள் முன்மொழிகின்றோம். அதற்கு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த ஐந்து நிதிக் குழுக்கள் மற்றும் பத்து மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள் பின்வரிசை உறுப்பினர்களால் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவர்கள் அமைச்சர்களால் நியமிக்கப்படுவதில்லை.


எனவே, அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து சுயாதீனமான மற்றும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இருவருடனும் இணைந்து செயற்படும் ஒரு வழிமுறையை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.


தற்போதுள்ள அரசமைப்பை மாற்ற வேண்டும் என இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் தற்போதைய பிரச்சினைகளையும் அறிய விரும்புகின்றார்கள். எனவே, இந்த 15 குழுக்களுக்கும் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க நான் முன்மொழிகின்றேன்.


அவர்களில் ஒருவர் இளைஞர் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படுவார். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.


அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகின்றோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்சினைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்.


தேசிய கவுன்சிலையும் நாங்கள் முன்மொழிகின்றோம். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு தேசிய கவுன்சில் என்று அழைக்கப்படுகின்றது.


தேசிய சபை மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும். நாட்டின் கொள்கைகள் குறித்து இதில் பேசலாம். அமைச்சரவையின் முடிவுகள் குறித்தும் பேசலாம். இந்நாட்டின் நாடாளுமன்ற மறுசீரமைப்பு குறித்தும் பேசலாம். அப்படியானால், அதை அரசமைப்பு என்று சொல்லலாம்.அமைச்சர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களை அழைக்க தேசிய கவுன்சிலுக்கு உரிமை உண்டு.


நாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சர்களின் அமைச்சரவையும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். தேசிய கவுன்சிலும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். 15 குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.


அமைச்சரவை மூலம் அரசைக் கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் பணிகளை ஆராயவும், தேசிய சபையின் மூலம் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடவும், மற்ற 15 குழுக்களின் நிதி விவகாரங்கள் மற்றும் பிற விடயங்களை மேற்பார்வையிடவும் ஓர் அமைப்பு உள்ளது. வேறு பல அமைப்புகளும் இதே போன்ற திட்டங்களை முன்வைத்திருப்பதை நான் பாராட்டுகின்றேன்" - என்றார்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.