பதினாறு வார்த்தை ராமாயணம் - உ. தாமரைச்செல்வி!!

 


பதினாறு வார்த்தைகளில் ராமாயணத்தைச் சொல்லும் பாடல் இது.


"பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்

விளக்கம்:

1. பிறந்தார் - ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்குத் தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2. வளர்ந்தார் - தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது.

3. கற்றார் - வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4. பெற்றார் - வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களைப் பெற்றது.

5. மணந்தார் - ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர் - சுனயனாவின் ஏக்கத்தைத் தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6. சிறந்தார் - அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7. துறந்தார் - கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தைத் துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. நெகிழ்ந்தார்

* அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
* குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
* பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
* பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
* அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
* சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
* விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
* எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9. இழந்தார் - மாய மானின் பின் சென்று அன்னை சீதையைத் தொலைத்தது.

10. அலைந்தார் - அன்னை சீதையைத் தேடி அலைந்தது.

11. அழித்தார் - இலங்கையை அழித்தது.

12. செழித்தார்

* சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
* ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

13. துறந்தார் - அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையைத் துறந்தது.

14. துவண்டார் - அன்னை சீதையைப் பிரிய நேர்ந்தது. ஸ்ரீராமருக்கு மிகுந்த வலியைத் தந்தது. அந்த வலி அவரைச் சில காலம் மனதளவில் துவளச் செய்தது.


15. ஆண்டார் - என்னதான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16. மீண்டார் - பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு, தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.


நன்றி -  முத்துக்கமலம், பன்னாட்டு மின்னிதழ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.