மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் றோயல் கல்லூரி அதிபரின் உறுதிமொழி!!

 


கொழும்பு றோயல் கல்லூரியின் தரம் 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவரை அக்கல்லூரியின் ஆசிரியர்கள் இருவரினால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியமை தொடர்பான முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நவம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் றோயல் கல்லூரியின் அதிபர் ஆணைக்குழுவின் முன்னிலையில், இனிமேல் எந்தவொரு உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகளுக்கும் கல்லூரியில் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவ்வாறான சித்திரவதைகள் பாடசாலையில் இருந்து ஒழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட 12/16 சுற்றறிக்கை பாடசாலையின் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் ஆசிரியர் ஓய்வறைகளில் காட்சிப்படுத்தப்படும் என அதிபர் ஆணைக்குழுவின் முன்னிலையில் உறுதியளித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலையில் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது.


அதேவேளை பாடசாலைகளில் சிறுவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு மாறாக செயற்படும் பாடசாலை முறைமைக்கு எதிராக பாரிய சமூக எதிர்ப்பு எழுந்துள்ளமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.      

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.