அபார வெற்றி பெற்றது இந்தியா!!
T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று மெல்பர்ன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் சிம்பாப்வே அணியை வீழ்த்தி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் குழு 1இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குழு 2ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணித் தலைவர் ரோகித் சர்மா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க. கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அத்தோடு விராட் கோலியும் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
வழக்கம் போல் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்து களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவருக்கு பின் வந்த ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், 187 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் சிம்பாப்வே அணி களமிறங்கியது.
இதன் போது சிம்பாப்வே அணி 17.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இந்த தொடரில் தோல்வியடைந்தது.
கருத்துகள் இல்லை