சீரற்ற காலநிலையால் கிளிநொச்சியில் பெருமளவு கால்நடைகள் பலி!

 


தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. 

இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது

கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும்,நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும்,  பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05  மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்தோடு திருவையாறு  கிராமத்தில்  கடும் காற்று காரணமாக மரம்  முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.

கடும் குளிருடன் கூடிய  மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்,  இன்று (09) மதியம்வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ள கால்நடை திணைக்களம்  இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.