கர்நாடகாவில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த ஈழத்தமிழர்கள்!

 




கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் கடந்த 06.01.2023  தொடக்கம்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவின் மங்களூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாள்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே ஏதிலிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாரிடம் தொடர்புகொள்வது என்பது தெரியாது என்று பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு விடுதியில் தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட போதும் தாம் வேற்று மொழியுள்ள மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் இந்திய தூதரகமோ அல்லது இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளோ தங்கள் மீது கருணை கொண்டு தங்களை குடும்பங்களோடு சேர்த்துவைக்க நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.