பழுத்த பழம் - கவிதை!!
வணிகம் தொடர்கிறது
வயதான போதிலுமே,
பணிகள் நடக்கிறது
பழுதான ஊனிலுமே.
கணிதக் கூட்டல்கள்
கைவந்த கலைதானே,
மணிகள் கூடிவிட
மலிவாகும் விலைதானே.
கனிவு கனிகளிலா..?
கண்களிலும் மிளிர்கிறது,
குனிந்த முதிர்வுடலும்
கூவுவதில் நிமிர்கிறது.
இனிப்பு விற்கின்ற
இரும்பு இதயமிது,
தனித்து நிற்கின்ற
தைரியப் பதியமிது.
இனிய இளைஞர்க்கு
எடுத்துக் காட்டுமிது,
துணிய மறுப்பவர்க்கு
தூண்டும் காட்சியிது.
ம.கமலக்கண்ணன்.
கருத்துகள் இல்லை