தகனத் தீயில்
கருகாமல்
இருக்கிறது
தாகத்தீ....
பாறையொன்றின்
இடுக்கிலிருந்து
முளைத்தெழும்
பசும் பூக்களாய்
ஆரவாரமற்ற
ஆழியில்
முளைத்தெழும்
முத்துக்களாய்
கால நதியில்
கருத்தரித்திருக்கிறது
சிவந்த வானம்....
ஏகாதிபத்தியங்களை
எரிதழல் சொற்களால்
அறுத்துப் போட்ட
சிவப்பு நூலைப்போல
என்னைக் கடைந்த
எழுத்துகள்
இறகசைக்கிறது
இனிமையாக...
சமூகச் சாட்டைகள்
சொற்களாகி
புத்தக வானத்தை
வரைந்து கொண்டிருக்கிறது.
அதுவும் நானுமென்ற
ஏகாந்தம்
சிதறிப் பறக்கிறது
தீப்பொறிகளாய்...
எல்லைகள்
கடந்துகொண்டிருக்கிறது
என் ஆரணியத்தின்
ஆலாபனைகள்....
சிற்பம் சிரிக்குமென்றும்
சிகரம் தொடுமென்றும்
தீரா நம்பிக்கையில்
திசைகள் கடக்கிறது
காலடித் தடங்கள்....
கோபிகை
06.03.2023
கருத்துகள் இல்லை