பொதுநலன் கருதி உருவான “சமூக விரோதி”


 விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரகனி, ஜெயம் மோகன், ராஜுமுருகன், நடிகர்கள் விஜய் சேதுபதி என பல்வேறு துறைகளை சார்ந்த 30 பிரபலங்கள்  சமூக விரோதி தலைப்பின் முதல் பார்வையை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.


சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் சமூக விரோதி என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தை பொது நலன்கருதி இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். 

சமூக விரோதி திரைப்படத்தில் பிரஜின், நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், முத்துராம் ஆகியோர் நடித்துள்ளனர்.


இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சீயோன் ராஜா கூறுகையில், “எனது இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படமாக சமூக விரோதி படம் உருவாகி உள்ளது.


சில சமூக விரோதிகள் அரசியல்வாதிகளையும், அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு,


சமூகத்தில் பல நாசகரமான வேலைகளில் புத்திசாலிதனமாக ஈடுபட இந்தச் சமுதாயத்தில் பணத் தேவையுடன் வேலையின்றி, பொருளாதார வறுமை  கொண்ட இளைஞர்களைத் தேடிப் பிடித்து எப்படி அவர்களைத் தொழில்நுட்பத்திற்குப் பழக்கி சமூக விரோத செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுத்துகிறார்கள் என்பதை சமூக விரோதி திரைப்படத்தின் மூலமாக கூறி உள்ளேன்.


“புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம் “என்கிற சிந்தனை முழக்கத்தோடு இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளோம்.

அறமே இல்லாத மனிதர்களிடம் இந்தச் சமூகம் கருணையை எதிர்பார்க்கிறது. மூளைச் சலவை செய்பவனிடம் முன்னேற வழி கேட்கிறது இதுதான் இந்த தலைமுறை முரண்.


கருத்தியல் ரீதியாக நான் வைத்திருக்கும் விவாதத்திற்கு சமூகம் செவி சாய்க்கும் என்றே நம்புகிறோம்.


இப்படத்தில் நல்லவன், கெட்டவன் என்ற எல்லையை வாழ்க்கை சம்பவங்களால் கடந்த ஒரு வைராக்கியம் மிகுந்த இளைஞனாக பிரஜின் நடித்துள்ளார்.


தனது தோற்றம், உடல் மொழி, பேச்சு என அனைத்தையும் மாற்றிக்கொண்டு ஒரு வீரியமுள்ள பாத்திரமாக வாழ்ந்துள்ளார், படத்தில் நடித்துள்ள அனைவருமே அந்தந்த, பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை எப்படி தன் வயப்படுத்திக் கொண்டு உரிய முன் தயாரிப்புடன் நடிக்க வேண்டும்  என்று விவாதித்து, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து கொடுத்திருக்கிறார்கள்,


எங்கள் படக்குழுவின் இந்தப் படைப்பைத் திரையுலக பிரமுகர்களும், அரசியல் ஆளுமைகளும், ஊடக நண்பர்களும் வெளியிட்டு பாராட்டி இருப்பது  எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது என்று சீயோன் ராஜா தெரிவித்தார்.


இராமானுஜம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.