பைத்தியக் காரர்கள் வாழ்வதற்கு எந்த உலகமும் இல்லை!!
உன் வசீகரம் என்னை
கிளர்த்துகிறது
என்று சொல்லுங்கள்
மூன்றாம் பிறை போல் ஒரு கோணல் புன்னகை கிடைக்கும்
சாகும் வரை உன்னை கை விடமாட்டேன் என்று சொல்லுங்கள்
உங்களுக்கு கஞ்சா மிதக்கும் ஒரு கோணல் கண்ணின் சாய்சிரிப்பு கிடைக்கும்
உன்மீதான சுவாரசியங்கள் தீர்ந்துவிட்டன கோடி கொடுத்தாலும் நான் அவன் பின் செல்வேன்
சொல்லிப் பாருங்கள்
மகிழ்ச்சி, போய் வா முன்னமே தெரியும். என்பான்
ஆனாலும் நீ என் வழித்துணை
சுவாசம் போல இருந்தும் இல்லாமலிரு
ஓ அப்படியா ?!
நல்லது நீ மகிழ்ச்சியாய் இரு
தண்ணீரில் மூழ்கும் கண்ணாடி சில்லு மண்ணாகும் காலம்வரை நான் காத்திருப்பேன் என்பான்
சினைப் பையின் தோல்
தாய்ப் பாலின் சுவை
பிறகு ஒரு நாள்
நாம் நினைத்துப் பார்க்கிறோமா தாயை
எரித்த சாம்பலை தடவிப்
பார்க்க
தகப்பனின் ஆடைகளை என்ன செய்கிறோம்
முத்தத்தின் ஈரத்தை போல
கண்ணீர் சாரத்தைப் போல
காய விடுகிறோம்
அவர்கள் வருகிறார்கள்
அவர்கள் போகிறார்கள்
அன்பின் சாரத்தில் எங்கு
தவற விடுகிறோம்
தெரிந்து ஆவதென்ன
பைத்தியக் காரர்கள் வாழ்வதற்கு எந்த உலகமும் இல்லை.
நேச மித்ரன்
கருத்துகள் இல்லை