அவளின் அழகு விசையால்..!!
விண்ணில் தோன்றும் அழகுப் பெண் அவள்
இரவில் தோன்றும் இருளில் அவள் உடல் மறைந்திட
வட்ட வெளிர் முகம் தனியே ஒளிர்வாய்த் தெரிந்திடும்!
மாதத்திலே சில தடவை
வெட்கப்பட்டு
கையினால் அவள் ஒளிர் முகம் மறைத்து
பௌர்ணமி, அமாவாசை,
மூன்றாம் பிறை, நாலாம் பிறை
என பலவித பாவனைகள் காட்டுகின்றாள்!
வளர்பிறையானாலும் தேய்பிறையானாலும்
கஞ்சத்தனம் ஏதுமின்றி
அகிலமெங்கும்
சமஅளவு அழகையே
காண்பிக்கின்றாள்!
அவளின் ஈர்ப்பு விசையால்
கடலையும் ஈர்த்தது போதாது
என்று
அவளின் அழகு விசையால்
கடல் மட்டத்திலிருந்து உயர
இருக்கும் எம்மையும் ஈர்த்திடுகின்றாள்!
விண்ணுலகிற்கு மட்டுமல்ல
மண்ணுலகிற்கும் ஒளி கொடுக்கும்
அவள் இல்லையேல்
இரவுக்கும் அழகு இல்லையே
செல்லும் வழியெங்கும் உடன் வந்து ஒளி தரும் நிலவுப் பெண்ணே
அந்தப் பெண்!
-ஒருத்தி.
கருத்துகள் இல்லை