ஆஸாத் மௌலானா மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!


 கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகாவான, ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் அப்பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டிற்கமைய இன்றையதினம் கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்தி வைத்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரே தனது சகோதரர் உடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பிள்ளையானின் சகா ஆஸாத் மௌலானா மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதில் ஆஸாத் மௌலானா முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்துள்ளதாகவும் பின்னர் மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கு சில நாட்கள்வாழ்ந்து வந்த பின்னர் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி இருப்பதாகவும் அப்பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது,

இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக ஆசாத் மௌலானா உள்ள நிலையில் அவர்மீது பெண் ஒருவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.