ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி.❗

குண்டு மழை நடுவிலும்

கொள்கையோடு கற்றோம் - உலகம்
கண்டு கொள்ளா நிலையிலும்
கல்வியினைப் பெற்றோம்.
மண்டை பிளக்கும் வெயிலிலும்
மரநிழலில் கற்றோம் - கொடும்
சண்டை நடந்த நேரத்திலும்
சலிக்காமல் கற்றோம்.
பராலைற் வெளிச்சத்திலும்
படிப்பினைத் தொடர்ந்தோம் - வளம்
இராத காலங்களிலும்
வல்லோராய் வந்தோம்.
உயிர்காத்து கற்பித்தோர்க்கு
உயர் மதிப்பைக் கொடுத்தோம் - அன்று
உயிர் துறக்கும் வாழ்வினிலும்
உயர்


மதிப்பெண்கள் எடுத்தோம்.
தந்தை தாயின் உதவியின்றித்
தனியாகச் சென்றோம் - நல்ல
சிந்தையுள்ள குருமாரைச்
சந்தித்ததால் வென்றோம்.
அண்டை நாட்டின் சதியினாலும்
அழுதழுது கற்றோம் - என்றும்
அன்றையநாள் கல்வி வாழ்வை
எப்படித் தான் மறப்போம்❗
-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.