இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

 


யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில்  இசை நிகழ்ச்சி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந் இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர். 

தாங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலிவை வெளிக்கொணரும் தங்களின் இசையமைப்பில் உருவான பாடல்களையும், இசையையும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்களும் கேட்டு இரசித்து மகிழ்கிறோம்.

அந்த வகையில் உங்களுக்கு ஏராளமான இரசிகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். பாரிய இனவழிப்பினை தமிழினம் சந்தித்ததனை நீங்கள் அறிவீர்கள். இவ்வினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களினை நினைவேந்தல் செய்வதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

இந்தநிலையில் தங்களால் யாழ்ப்பாணத்தில்

 இசை நிகழ்ச்சி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ள ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளாகிய இதே தினங்களில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட நோயாளர்கள் பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினரால் கட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தவர் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை வருடா வருடம் நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்த துயர்மிகுந்த நாட்களில், நினைவேந்தல்களூடாக அடுத்த சந்ததியினருக்கு தமிழின போராட்டத்தின் நியாயங்கள் சென்றடையும் என நாம் நம்புகிறோம்.

இதனை மடைமாற்றி இந்நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக மாற்றியமைக்க முயலும் இலங்கை இந்திய அரசுகள், தங்களை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள்.

இந்நினைவேந்தல் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ கலந்து கொள்வதானது அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு என்பதுடன் பேரினவாதத்தால் இன்றும் தடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு துணை நிற்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும்.

மேற்படி நினைவேந்தல்களூடாக தமிழினம் அடுத்த சந்ததிக்கு கடத்த முயலும் தமிழின விடுதலை வேட்கைக்கும் எதிரான செயற்பாடாகவும் அமையும்.

தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருப்பவர் என்னும் வகையில் இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதனை அன்புரிமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்" என தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.