வீரிய விதைகள் நீங்கள்.....!!


பல நூறு ஆண்டுகள் கடந்தாலும்

தீராத தாகமதாய்

விழி தேடும் உறவுகளின் 

நினைவுகளை நெஞ்சில் ஏற்றி

புன்னகை தொலைத்து 

நம்பிக்கை ஒளியில் மட்டும் 

பூக்களின் இதழ்கள்

விதைகளைத் தேடி

விழிநீர் சொரிகிறது!


ஒவ்வொரு விதைப்பும்

விடியலின் அறுவடையாகவே

மலர்களினால் பிரசவிக்கப்பட்டன!


கருக்கொண்ட காலம் முதல்

பூத்து மணம் பரப்பும் எதிர்பார்ப்பு வரையும் 

நொடிப்பொழுதும் ஓசையோடு ஓடிய கால்கள் 

உறுதியோடு பகைவனின்

வாசல் தேடி  

நீதிக்காய் மறமொழியில்

பேசினர்!


கருவறைகள் கதறி அழுத ஒலியின் 

அதிர்வில் என்னவோ?

மேகம் கூடி அழுது தன்

கண்ணீரை கொட்டி

தீர்த்துவிடுகின்றது!


நீதியின் உறைவிடமாய் நீங்கள்

நீண்ட இருள்  விலக்க

ஆண்ட இனம் தளைக்க

வினைத்திறனாய் நீங்கள் மட்டுமே

உணர்வுகளை இயக்கும்

மாபெரும் சக்தி!


விதைகளே

விருட்சமாய் 

உருவாக்கும் உயிர்

உங்களிடம் உள்ளதால்

மண்ணின் காதல்

எம்மை அணைக்கும்!


விண்ணில் தோன்றும்

ஆதவன் கதிர்கள்

வீரிய விதைகளை

வெளிக்கிளப்பும்!

✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.