கருவுடைக்கும் கார்த்திகை .!!


கருமேகம் கருவுடைத்து

மானமாவீரர் வாரம் 

பிறக்கிறது. 


ஒரு பெரும் சரித்திரத்தின்

விதை குழிகளில் 

மழைத்துளியால்

நனைக்கிறது. 


காந்தள் கண்விழித்து

இதழ்களை

விரிக்கிறது. 


வீரக்குழந்தைகளின்

பாதங்களில்

பூசைக்காய் புன்னகை

சிந்துகிறது. 


அவர்கள் கனவுகளை தடவி

மெல்லிய காற்று

மேனியுரசி 

போகிறது. 


விதையில் எழும்பிய 

முளையொன்று

சுடர்வணக்கம்

செய்கிறது. 


வேரிழந்த மரமோ

வேதனையில்

தவிக்கிறது. 


சாவினை தோள்மீது

தாங்கியவர்

சரித்திரம் 

நிலைக்கிறது. 


இன்னும் சாதனை

நிகழ்த்தவென உம்

சந்ததி

துடிக்கிறது.


எண்ணும் எழுத்தும் 

எம் மண்ணை தாங்கி

விடுதலையை

வரைகிறது!


கண்ணும் கருத்துமாக 

நின்று கனவுகளை காலம்

மெல்ல மெல்ல சுமக்கிறது!


உங்கள் ஈகங்களே எங்களை

தாங்கி தாய்மடிமீது

உணர்வுகளை சேர்க்கிறது!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.