ஒரு ஆசிரியரின் உணர்வைக் கரைத்த பொழுதுகள்.!!!
வகுப்பறையில் திடீரென புகுந்த அதிபர்,. "என்ன ரீச்சர் கொஞ்சம்கூட அறிவில்லையா..... எத்தின நாள் உங்களுக்குச் சொல்லுறது..... சொல்லுறத நீங்களே கேக்காட்டி எப்பிடி பிள்ளையள் உங்கட கதைய கேப்பினம்..... "
என்ற அந்த தடித்த குரலின் அதட்டலை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர் முழுவதுமாய் விறைத்துப்போனபடி
"இல்ல சேர்..... நான் ..... "
"உங்கட உந்த கதையளைக் கேட்டு எனக்கு காதே புளிச்சிட்டு சரியா..... உந்தப் புராணத்த தூக்கிப்போட்டிற்று சொன்னதச் செய்யுங்கோ" என்றபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் அதிபர்.
இதுக்குப் பிறகு ஏதோ ஒன்று கட்டாயம் நிகழும் என்பதை உள்ளூர உணர்ந்துகொண்ட ஆசிரியர், அது என்னவாக இருக்கும் என்ற ஏக்கம் அவர் மனதிலே புழுவாய் குடைந்துகொண்டிருந்தது.
பயத்தினால் நடுங்கிப்போன ஆசிரியரின் பரிதாபத்தை மாணவர்கள் அழுவாரைப்போல பார்க்க சகித்துக்கொள்முடியாமல் இருக்கையில் அமர்ந்து எதையோ பறிகொடுத்ததைப்போல சிந்திக்கத் தொடங்கினார்.
"சிக் என்ன இது தலையிடியா இருக்கு .....,
இதவிட வேலைய விடலாம் போல இருக்கு
கொஞ்சம்கூட மனிசில்லாத ஆக்கள்.. " என தனக்குள்ளே நொந்துகொண்டாள்.
அப்படித்தான் அன்றைய பொழுதும் விடிந்தது. ஏன் எதற்காக இந்த பொழுது புலர்கின்றது என்ற ஏக்கமே அந்த ஆசிரியரை ஆட்கொண்டது. இருந்தும் தத்தெடுத்த பிள்ளைகளை கண்ணாய் காத்து வளர்க்க வேண்டும் என்ற அவா அவரை மேலும் உறுதிபெறச் செய்தது.
சரி அழுதும் அவள்தானே பிள்ளையைப் பெறவேண்டும் என்ற நிலைப்பாடே இருந்தது. எழும்ப முடியாதளவிற்கு உடல்நிலை மிக மோசமாக இருந்ததை அவளால் மட்டுமே உணர முடிந்தது.
ஊரே கண்மூடித் துயில் கொள்ளும் நேரத்தில், அவளது கண்கள் மட்டும் தூக்கத்தை தொலைத்து காலைச்சூரியனை எதிர்பார்த்தபடி அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் தினமும் எழுந்துவிடுவார் ஆசியர் பிரியந்தி.
இது தினமும் நடக்கும் ஒன்றாகிவிட்டதால் வாழ்கையே வெறுத்துப்போயிருந்தாள் பிரியந்தி.
இருந்தும்,
தட்டுத்தடுமாறி எழுந்தவளுக்கு, தூக்கமும் அவள் கண்ணில் அலாதிப்பிரியம்கொண்டு போக மாட்டேன் என அடம்nபிடித்துக்கொண்டிருக்க, ஏதோ கையில் தட்டுப்படும் பாத்திரங்களை எடுத்து காலைச் சமையலுக்கு ஆயத்தமாகினாள்.
'என்னத்தை சமைக்கிறதெண்டே தெரியாமல் இருக்கு...'. ஐயோ என்னால எண்டால் ஏலாம இருக்கு..... கடவுளே இது என்ன வாழ்க்கை' என தனக்குள்ளே முணங்கினாள் பிரியந்தி.
பெண்ணென்பவள் பல அவதாரங்களை எடுத்திருக்க வேண்டும் போல, அவளால் மட்டுமே குடும்பத்தின் அத்தனை சுமைகளையும் தாங்கிக்கொள்ள முடிகிறது.
தனக்கும் ஒரு வேளைச் சாப்பாடும் கணவனுக்கும் காலை மதிய நேரச் சாப்பாடு என சமையல் நீண்டிருந்தது.
வீட்டக் கூட்டினாலும் சரி அவன்ர உடுப்பத் தோச்சாலும் சரி எல்லாமே அவள்தான். இவ்வளவு வேலைகளையும் முடிச்சுத்தான் அவள் வீட்ட விட்டு வெளிய வரமுடியும்.
அவனும் பாவம்தான் மாடா கூலிக்கு மாரடிச்சுப்போட்டு வந்தால் கும்பகரணன் படுக்கதான். எந்த உதவியும் அவளுக்கு இல்ல. எல்லாமே அவள்தான்.
அப்பிடியே சமைச்சதையும் எடுத்துக்கொண்டு அரக்கப்பரக்க பஸ்க்கு ஓடிப்போனால் அங்கயும் இருக்க இடமில்லை. நிண்டான் நிலையில அத்தனை கிலோமீட்டர் தூரம் போறதெண்டால் சொல்லவா வேணும். கால் கடுக்க கடுக்க, நித்திரையும் தூங்க எப்படித்தான் வேலைக்கு போறது.
எல்லாரும் பஸ் ஓடுற பக்கம் பாருங்கோ..
கொஞ்ச முன்னுக்கு போங்கோ
சொன்னால் விளங்காதா....
'என்ன ரீச்சர் உங்களுக்கு வேறயா சொல்றதா....'
'முன்னுக்குப் போங்கோவன்...'
என்ற நடத்துனரின் வாய் வார்த்தைகள் அவளை நிலைகுலையச் செய்தது.
பயண நடுவிலே இளசுகளின் கிண்டல்களும் கிழு கிழுப்புக்களும் அவளையும் விட்டுவைக்கவில்லை. சொல்லப்போனால் அத்தனை அழகும் அவள் முகத்தில் அடம்பிடித்து ஊட்கார்ந்திருக்க வேண்டும் போல, அவள் ஒரு பேரழகி.
இதனால்தான் இளசுகளின் கண்ணில் இலகுவாய் அகப்பட்டுக்கொண்டாள்.
இத்தனைக்குள்ளும் அவள் ஒரு கர்ப்பிணி என்பதை யாரும் கணக்கெடுத்ததாய் தெரியவில்லை. ஒருவர்கூட எழுந்து அவளை உட்கார வைக்காதளவிற்கு அனைவர் மனமும் வறுமைப்பட்டுப் போயிருந்தது.
இருந்தும், அவள் வயிற்றில் சுமக்கும் பிள்ளையோடு தத்தெடுத்த பள்ளிக்குழந்தைகளையும் தன் குழந்தையாய் தத்தெடுத்துக்கொண்டதால் அத்தனை வலிகளையும் பொறுமையாய் தாங்கிக்கொண்டாள்.
வழமையைப்போல பாடசாலை வகுப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
இதற்குள்தான் பெரும் பிரளயமே அந்த ஆசிரியருக்கும் ஏற்பட்டிருந்தது.
மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெற இருந்ததால் அதற்கான ஆயத்தப்படுத்தல்கள் என்பவற்றை lessons (பாடக்குறிப்பேடு) எழுத வேண்டும். அதை குறித்த நேரத்திற்குள் ஒப்படைக்காவிட்டால் அதிபர் பேசுவாய் ரய்,.
இதைவிட, வலயத்திலிருந்து வரும் Team ஐ சமாளிக்க வேண்டும். இல்லை என்றால் மூக்கு மயிர் பிடுங்கி ஆள்ப்பாரம் பார்த்துவிடுவார்கள். எதைத்தான் செய்வது என்ற கேள்வி அவளுக்கு மாத்திரமல்ல அத்தனை ஆசிரியர்களுக்கும் எழும் கேள்வியே.
நித்திரைத்தூக்கம் அவள் கண்ணில் ஒற்றியபடியே இருக்க, அத்தனை மணித்தியாலம் வவ்வால் தொங்கியதைப்போல கால் கடுக்க கடுக்க தொங்கி வந்தவளுக்கு இருக்க முடியாது. வகுப்பிலும் நின்றபடிதான் படிப்பிக்க வேண்டும் என்பது அதிபரின் கட்டளை. மீறினால் அவ்வளவுதான்.
இத்தனைக்குள்ளும் வயிற்றில் அவள் சுமக்கும் குழந்தை அவ்வப்போது எட்டி உதைத்துக்கொண்டிருந்ததையும் அவளால் தாங்க முடியாதிருந்தது. யாரிடம் சொல்லியழுவால். யார்தான் அவள் துன்பத்தை கண்டுகொள்வார்கள்.
வீட்டுச் சுமை, பிள்ளை வயிற்றிலிருக்கும் சுமை, கடன்தொல்லை, பாடசாலையில் வழங்கப்படும் பணிச்சுமை இவை எல்லாம் ஒன்றாய் கூடி அவளோடு போரிட்டுக்கொண்டிருந்தது.
அப்போதூதான் அந்த மனிதாபிமானற்ற செயல் நடந்தேறக்காத்திருந்தது. அவள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டாள் இப்படி மனிதாபிமானமற்றவர்கள் இருப்பார்களென்று.
அப்போதுதான் கன்னத்தில் ஓங்கி அறைந்ததைப்போல ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது. சற்றும் எதிர்பார்காதவளுக்கு எல்லாமே புதிதாகவே இருந்தது.
'என்ன ரீச்சர் கொஞ்சம்கூட அறிவில்லையா..... ஆ எத்தின நாள் உங்களுக்கு சொல்லுறது..... சொல்லுறத நீங்களே கேக்காட்டி எப்பிடி பிள்ளையள் உங்கட கதைய எப்பிடிக் கேப்பினம்..... '
என்ற அந்த தடித்த குரலின் அதட்டலை எதிர்பார்க்காத ஆசிரியர் முழுவதுமாய் விறைத்துப்போனபடி
'இல்ல சேர்..... நான் ..... உங்கட உந்த கதையள கேட்டு எனக்கு காதே புளிச்சிட்டு சரியா.... உந்த புராணத்த தூக்கிப்போட்டிற்று போற வழிய. பாருங்கோ'
'Lessons வைக்கச்சொல்லி எத்தின நாளா சொல்லுறது.... ஆ சொல்லிச் சொல்லி களைச்சுப்போனன்.... '
இதுக்கு மேல மன்னிப்பில்லை சரியோ.......
இடையே குறுக்கிட்ட ஆசிரியர்
'இல்ல சேர் , நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுக்கோ...... '
'உங்கட கதை ஒண்டும் தேவையில்ல.. நான் உங்கள பற்றி வலயத்துக்கு அறிவிச்சானான்... அவங்கள் கட்டாய இடமாற்றம் போட்டிருக்காங்கள் வந்து எடுத்திட்டு போங்கோ.... '
என்றபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
இறுதிவரைக்கும் ஆசிரியர் சொல்ல வந்த விடயத்தை சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
'சொன்னத செய்யுங்கோ 'என்றபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் அதிபர்.
எதுவுமே செய்ய முடியாது கையறு நிலையில் நின்றாள் பிரியந்தி.
இது ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இடம்பெறும் துயரம்தான். இருந்தாலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரியந்திக்கு இந்த விடயம் சற்று கனதியாகவே இருந்தது.
அப்படியே மெதுவாக பாடசாலையைவிட்டு வெளியேறி பேருந்துக்காய் காத்திருந்தவளுக்கு சற்று தூக்கம் எடுக்க அப்படியே தன்னை மறந்து அசந்து தூங்கிவிட்டாள்.
அவளது தூக்கத்திலும், பாடசாலையில் இடம்பெற்ற சம்பவங்களே மனதில் முட்டி மோதிக்கொண்டிருந்தன
திடீரென கண் விழித்தவளுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. தான் செல்ல வேண்டிய பேருந்து தன்னைக் கடந்து செல்வதை கண்டு கண் கலங்கிப்போனாள்.
இனி என்ன செய்யிறது அடுத்த பஸ்ஸிலதானே போக வேண்டும்
எல்லாம் தலை எழுத்து என்றபடியே மெதுவாய் அமர்ந்துகொண்டாள்.
நான் உங்கள்,
ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்)
கருத்துகள் இல்லை