கைதிக்கு விஷம் கலந்த பால்பைக்கற்!

 


ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தின் சிறையில் இருந்த சந்தேகநபர்கள் இருவர், இனந்தெரியாத ஒருவர் வழங்கிய பால் பைக்கற்றை அருந்தி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றில் விஷம் கலந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது சந்தேகநபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்ததுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றார்.


விசாரணையின் பின்னர், தம்பனை பகுதியில் வைத்து தப்பியோடிய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


அதன்படி குறித்த சந்தேகநபருக்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் ஒரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.


இவ்வாறானதொரு பின்னணியில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் காதலி நேற்று (07) காலை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸாருக்கு வந்து சுகம் விசாரித்ததுடன் மற்றுமொரு சந்தேகநபரிடம் நலம் விசாரிக்க மேலும் ஒருவரும் அங்கு வந்துள்ளார். குறித்த நபர், சந்தேகநபர்களிடம் இரண்டு மீன் பாணையும், பால் பைக்கற்றை கொடுத்து விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் மீன் பாண்களை சாப்பிட்டுள்ளனர்.


ஜிந்துபிட்டியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு தம் கையில் வைத்திருந்த பால் பைக்கற்றை வழங்கியதாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


அதைக் குடித்தவுடன் அவர் சுருண்டு விழுந்ததுடன், மற்றைய சந்தேகநபர் தரையில் விழுந்த பால் பைக்கற்றை எடுத்து குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த சந்தேக நபர்கள், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


பால் பைக்கற்றை கொடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.