தனியாகப் போறவளே!

 


தண்டவாளப் பாதையிலே

தனியாகப் போறவளே!

மண்டகுழம்பித் தவிக்கிறன்

மனமுருகிப் பாராயோ? 


கொளுத்தும் வெயிலில்

கோபமாய் நடப்பவளே!

கெழுத்து மீனைப்போல

குறும்பார்வை குத்துதடி 


பளையில் பிறந்தவளோ

பதுளையில் வளந்தவளோ

கலையில் சிறந்தவளோ

மழையில் நனைந்தவளோ 


யுனி முடிச்சவளோ

யூனியனில் படிச்சவளோ

பனி பிடிச்சவனாய்

பரிதவித்து அலையிறனே 


ஆற்ற மகளெண்டு

அறிந்த நாள்முதலாய்

மீற்றர் வண்டிபோல் மனசு 

மேட்டர் ஆனதடி 


அம்மாடி உன் அழகில்

பூஞ்சாடி தோற்குதடி

சிம்கார்ட்டு சிறுத்ததுபோல்

என்கார்ட்டு குறுகுதடி 


கண்ணால கண்டதனால்

கனவெல்லாம் நீதான்டி

சுன்னாகம் வந்தபின்னும்

உன்னால தவிக்கிறன்டி 


ஓ மெண்டு நீ உரைத்தால்

ஓடியோடி நான் உழைப்பேன்

நோவெண்டு நீ மறுத்தால்

நொதேனில போய்க்கிடப்பேன் 


வல்வை மண்ணெடுத்து

வடிவான பொட்டுவைப்பேன்

நல்லைக் கந்தனுக்கு

நமஸ்காரம் செய்துகொள்வேன் 


வாகைப் பூப்பறித்து

தோகையே சூட்டிடுவேன்

தாகம் உனக்கெடுத்தால்

தண்ணிரூற்று காட்டிடுவேன் 


மாவடிக்கு வாடிபெண்ணே

காவடிபோல் தூக்கிடுவேன்

தாவடியில் வீடுகட்டி

தாலிகட்டிக் கூட்டிப்போறன் 


சும்மா நான் கத்தேல்ல

வேல இன்றி சுத்தல்ல என்ர

அம்மாமேல சத்தியம், உன்ர

அப்பா வாறார் பத்திரம். 


- பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.