மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நாளை ஆரம்பம் !


உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐமச மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேமச தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் குறியிடப்பட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

543 தொகுதிகள், 28 மாநிலங்கள், 8 ஒன்றிய பிரதேசங்கள் ஆகியனவற்றை ஊடுருவி சுமார் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும், 2,600 கட்சிகளின் வேட்பாளர்களை கொண்ட உலகின் மிக பிரமாண்ட ஜனநாயக தேர்தல் நடவடிக்கையின் மூலம், ஆறு வாரங்களில் ஏழு கட்டங்களில், இந்தியாவின் பல கட்சி ஜனநாயகம் இந்திய ஒன்றியம் என்ற இந்திய அரசாங்கத்தை தெரிவு செய்கின்றது.

இலங்கை பிரஜை என்ற பெருமையுடனும், மறைக்க பட முடியாத இந்திய வம்சாவளி பின்னணியுடனும், இந்திய நாட்டு தேர்தல்களை கணிக்கின்ற இலங்கையின் ஒரு ஜனநாயக கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய தேர்தல் பிரசாரத்தில் என் மனதை வெகுவாக கவர்ந்த சுலோகம் ஒன்று உண்டு.

அது, “நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றீர்கள் என்பதற்கு நேரம் எடுத்து சிந்தியுங்கள்! சரியாக சிந்தித்து உங்கள் சரியான எம்பியை தெரிவு செய்யுங்கள். ஆனால், தேர்தலில் வாக்களிக்க வேண்டுமா? இல்லையா? என ஒருகணமும் சிந்திக்காதீர்கள்! எப்போதும் வாக்களியுங்கள்! அது உங்கள் உரிமை!”. இது இலங்கைக்கும் மிகவும் பொருத்தமான செய்தியை தரும் சுலோகம் என எண்ணுகிறேன்.

மிக சிறந்த இந்திய மனங்களால் கட்டி எழுப்ப பட்டு, நியாயம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும், இந்திய ஜனநாயகத்துக்கு எனது பாராட்டுகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.