சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!!
![]() |
நிமிர்ந்திந்த ஞாலத்தை ஞானத்தாலும்
நிலையோங்கு வீரத்தோ(டு) ஈரத்தாலும்
தமிழாண்ட வரலாறிங்(கு) இருப்பதாலே
தனிமிடுக்கு நமக்கதிலே பிறப்பதாலே
தமிழர்க்கிங்(கு) இருபுத்தாண்(டு) இருக்கலாம்! நாம்
தக்கபடி கொண்டாட்டம் நடத்தலாம்தான்!
அமிழ்தத்தை இருகலனில் ஊற்றித் தந்தால்
அதனைஏன் கொண்டாட யோசிக்கின்றோம்?
*
விடியலென்றால் புதுமலர்கள் மலர்வதற்கே,
விழுவதென்றால் புதிதாக எழுவதற்கே,
நடத்தையிலே நாம்மாற்றம் கொணர்ந்திடாமல்
நன்மைவரும் எனச்சொல்லல் சிரிப்பதற்கே!
கடந்ததனை எண்ணியினிக் கவலுறாமல்
காலத்தை மீறிநிதம் கனா காணாமல்
கிடைத்திருக்கும் புதுநாளைப் பயன்படுத்திக்
கிளரின்பம் வளர்செய்கை செய்தே வாழ்வோம்!!
*
ஒரேதரம் வாழ்க்கை உருப்படியாய் வாழ்வோம்
குரோதிமுத லேனும் குறித்து!
-விவேக்பாரதி
14.04.2024
காலை 11.30
கருத்துகள் இல்லை