சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!!

 


நிமிர்ந்திந்த ஞாலத்தை ஞானத்தாலும் 

நிலையோங்கு வீரத்தோ(டு) ஈரத்தாலும்

தமிழாண்ட வரலாறிங்(கு) இருப்பதாலே

தனிமிடுக்கு நமக்கதிலே பிறப்பதாலே

தமிழர்க்கிங்(கு) இருபுத்தாண்(டு) இருக்கலாம்! நாம்

தக்கபடி கொண்டாட்டம் நடத்தலாம்தான்! 

அமிழ்தத்தை இருகலனில் ஊற்றித் தந்தால் 

அதனைஏன் கொண்டாட யோசிக்கின்றோம்? 

*

விடியலென்றால் புதுமலர்கள் மலர்வதற்கே,

விழுவதென்றால் புதிதாக எழுவதற்கே, 

நடத்தையிலே நாம்மாற்றம் கொணர்ந்திடாமல்

நன்மைவரும் எனச்சொல்லல் சிரிப்பதற்கே!

கடந்ததனை எண்ணியினிக் கவலுறாமல்

காலத்தை மீறிநிதம் கனா காணாமல்

கிடைத்திருக்கும் புதுநாளைப் பயன்படுத்திக்

கிளரின்பம் வளர்செய்கை செய்தே வாழ்வோம்!!

*

ஒரேதரம் வாழ்க்கை உருப்படியாய் வாழ்வோம் 

குரோதிமுத லேனும் குறித்து! 


-விவேக்பாரதி

14.04.2024

காலை 11.30

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.