மோடிக்காக விரலை அறுத்த இளைஞன்!!

 


நடைபெறவுள்ள தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகிலுள்ள சோனார்வாடேவைச் சேர்ந்தவர் அருண் வெர்னேகர் (29). நகைக் கடை நடத்திவரும் இவர், பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.


கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடியை பிரதமர் ஆக தேர்ந்தெடுக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதினார்.


அதோடு கடந்த 2020-ம் ஆண்டு தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டி, சிறிய‌ மார்பளவு சிலை வைத்துள்ளார். இந்நிலையில் அருண் வெர்னேகர் கடந்த 6-ம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக காளிக்கு சிறப்பு ரத்த பூஜை மேற்கொண்டார்.


அப்போது கை விரலை வெட்டி ரத்தம் சேகரிக்க முயன்றபோது விரலின் முன் பகுதியை முழுவதுமாக வெட்டிக்கொண்டதால், விரல் துண்டானது. உடனடியாக துண்டான பகுதியுடன் அவர், மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால் மருத்துவர்கள் அதனை மீண்டும் இணைக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.


இதனால் வருத்தம் அடைந்துள்ள அருண் வெர்னேகர், “நான் சிறிதளவு ரத்தம் சேகரிக்க முயன்றேன். நான் நினைத்ததை விட அதிகமாக வெட்டிக் கொண்டேன். அந்த விரலை மோடி பிரதமர் ஆக, காளி அம்மனுக்கு பலி கொடுத்ததாக நினைத்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளாராம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.