வானிலையில் மாற்றம் !


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.


இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு,கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று மிகவும் உச்ச அளவில் வெப்பநிலை காணப்படும்.

இதேவேளை சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி,ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.