நானே நெரித்து அம்மாவை கொலை செய்தேன்!


அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது  இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.

மறுநாள் பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததுடன், வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்பட்டன.

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை காணாமல் போன 16 வயது சிறுவனை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தாயின் கழுத்தை காலால் நெரித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சிறுவனை முற்படுத்தியதை அடுத்து, அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளான்.

உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை , சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர்  என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் கைபேசி விளையாட்டுக்களுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையானவர் எனவும் , அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் என கடந்த 05ஆம் திகதி பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 



-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.