ஈரத்தீ (கோபிகை) - பாகம் 35!!


வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. குளிர் கலந்து வீசிய மெல்லிய காற்று, உடலைத் தழுவிச் செல்ல,  இரண்டு கைகளையும் சேர்த்து ஒன்றால் ஒன்றை தேய்த்தபடி, கண்களை.மூடி மரத்தடியில் அமர்ந்திருந்தேன். 


அந்த அழகியல் மயமான வானிலை,  பறவைகளைப் பாடச்செய்தது போலும்.  

கூட்டமாகப் பறந்து சென்ற கிளிகளின் கீச்சிடும் ஒலி,  ஒரு இனிய இசையாக மனதை தழுவிச் சென்றது. 


சற்று தள்ளி இரண்டு மைனாக்கள் இரை தேடி, நிலத்தை கொத்திக் கொண்டிருந்தன. 

பக்கத்தில் இருந்த மாமரத்தில் மரங்கொத்தி ஒன்று தன் வாயால் இருப்பிடம் அமைத்துக் கொண்டிருந்தது. 


வண்ணமதி,  தூரத்தில் வண்ணத்துப்பூச்சி பிடிப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தாள்.  

பாடசாலை விடுமுறை என்பதால் வண்ணமதியையும் அழைத்துக் கொண்டு,  தருமபுரம் பகுதியில் இருந்த எனது பண்ணைக் காணிக்கு  வந்திருந்தேன். 



அடர்ந்து செழித்திருந்த மரங்கள், அழகாய் ஓடிய கொடிகள், சிறுகுளம்,  ஆடு, மாடு, கோழி, மயில், வான்கோழி என்று ஓடித்திரிந்த பிராணிகள், இவற்றை எல்லாம் பராமரிப்பதற்காக ஐம்பது வயதைக்கடந்த தம்பதியர்  என,  நான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய வாழ்விடம் அது. 


ஓரளவான வயதிற்குப் பிறகு,  செஞ்சோலையில் வளர்ந்த எனக்கு,இப்படியான வாழிடம் ஒரு கனவாக இருந்தது.  அந்தக் கனவுக்காக தான் படித்தேன்... 

அந்தக் கனவுக்காகத்தான் ஓடிக்கொண்டே இருந்தேன். 


சொந்த நிலம் என்பதும், எங்களுக்கான இருப்பிடம் என்பதும் சுதந்திரமான வாழ்க்கை என்பதும் இன்றியமையாத ஒன்று.  அது வாழ்வியல் மட்டுமல்ல, வரலாறும் கூட.  


பிறப்பிற்கும் இறப்பிற்குமான காலம் என்பதல்ல வாழ்க்கை.  நாம் விட்டுச் செல்லும் அடையாளம் தான் எமது வாழ்க்கை என்பதை தாரக மந்திரமாக நினைப்பவள் நான்.

என்னுடைய அடையாளத்திற்காக ஓடிய பயணம் இதுவரை வந்திருக்கிறது. 


இன்னும் பல கனவுகள் இருக்கிறது.  எல்லாவற்றையும் நனவாக்கி விடவேண்டும் என்பது அன்றாடம் நான் உருப்போட்டுக் கொள்ளுகிற விடயம். வண்ணமதியும் கூட அப்படி ஒரு கனவின் வடிவம் தான். 


நான் சிந்தனைகளில் மூழ்கி இருக்க,  அருகில் வந்து நின்ற தேவி அம்மா,  

"அங்க பாரம்மா... ஆர் அது... நாலைஞ்சு பேர்,  மகிழுந்திலை வருகினம். ...வந்து பாரம்மா...." என்றதும் அவசரமாக எழுந்து படலையடிக்கு வந்தேன். 


இனிய ஆச்சரியம் என்னைச் சூழ்ந்து கொண்டது.  

மாமா,  தேவமித்திரன், அகரன், பாமதி அக்கா, இனியன், பார்கவி எல்லோரும் ஒன்றாக வந்திருந்தனர்.


"வாங்கோ.... உள்ள வாங்கோ... " என்று சந்தோசச் சிரிப்போடு அழைத்த என்னை, தேவமித்திரன் பார்த்த பார்வையில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. 

சட்டென்று பார்வையை விலக்கியவளாக மாமாவின் கையைப் பற்றியபடி உள்ளே நடந்து விட்டேன். 


அவரை அழைத்து வந்து இருக்கை ஒன்றில் அமரவைத்தேன்,  அந்த முதிய கரங்களில் ஒரு நடுக்கத்தை என்னால் உணரமுடிந்தது. 


விரிந்து நின்ற மாமரத்தின் கீழே,  புல்லால் வேயப்பட்டிருந்த வட்டவடிவ கொட்டிலின் உள்ளே,  கழிவு மரத்துண்டுகளில் அமைக்கப்பட்டிருந்த கதிரைகளில் எல்லோரும் அமர்ந்து கொண்டனர். 


*கனியம்மமா... இந்த இடம்,  இந்த வீடு, எல்லாமே நல்ல வடிவா, நல்ல சூழலா இருக்கு...பிள்ளை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறாய். ...என்னம்மா... " என்றார். 


நான் பேசாமல் சிரித்துக் கொண்டேன். 

மதியவேளை என்பதால், தேவி அம்மா, தேசிக்காய் தண்ணீரோடு வந்து விட,  கூடவே,  துரை அப்பாவும் வந்து விட,  

இருவரையும் வந்திருந்தவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். 


"இவா தேவி அம்மா.... 

இவர் துரை அப்பா... 

ரெண்டு பேருமே எனக்கு முக்கியமான உறவுகள்.... இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாக இந்த மண்ணுக்கு கொடுத்திருக்கிறார்கள்... ஒரே மகள்...முள்ளிவாய்க்காலில் முழுக்குடும்பமுமே பதுங்குகுழிக்குள் இறந்து விட்டார்கள். 

செஞ்சோலையில் வளர்ந்த காலத்தில் எங்கள் செஞ்சோலை வளாகத்துக்கு அருகில் தான் இவர்களின் வீடு.. 

பிறகு முகாமிலை கிட்டத்தான் இருந்தவை,  நான் அப்பிடியே பல்கலைக்கழகத்துக்கு படிக்கப்போட்டன்,  மருத்துவப் படிப்பு முடிச்சிட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையிலை பயிற்சிக்கு நிக்கேக்க தான் திரும்பவும் கண்டனான்" என்றேன். 


"மனம் முழுக்க வலியோட,  வாழ வழி தெரியாமல் நிண்ட நேரம், பிள்ளைதான் எங்களைக் கூட்டிவந்து, வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டினது... இப்ப இதுதான் எங்கட உலகம்.. " என்றார் துரை அப்பா. 


"அப்பா... நீங்கள் தான் எனக்கு உதவி செய்யிறியள்... நீங்கள் ரெண்டு பேரும் இல்லாட்டி, நான் என்ன பாடுபட்டிருப்பனோ தெரியேல்லை... ஒரு வாழிடத்தை இப்பிடி ஆரோக்கியமானதாக உருவாக்கவேணும் எண்டுற என்ரை கனவு, வெறுமனே கனவாகவே முடிஞ்சிருக்கும்.... "என்றேன்.


"ஏனம்மா.. அப்பிடிச் சொல்லுறாய்,  உன்ரை தாராள மனசுக்கு நீ நல்லா இருப்பாய் கண்ணம்மா, நாங்கள் இல்லாட்டி வேற யாரோ, உனக்கு துணையா கிடைச்சிருப்பினம்... நீ கவலைப்படாதையம்மா.. " என்ற தேவி அம்மாவை அன்போடு அணைத்துக் கொண்டேன். 


கதையுடன்,  தேவி அம்மா கொண்டு வந்த தேசிக்காய் தண்ணீரை நானே வாங்கி எல்லோருக்கும் பரிமாறினேன்.  


இயல்பிலிருந்து மாறுபட்ட தேவமித்திரனின் அந்த கூர்மையான பார்வை தான்,  எனக்குள் எதையோ உருட்டிக் கொண்டிருந்தது. 


"சரி... நீங்கள் எல்லாரும் கதைச்சுக் கொண்டிருங்கோ... நான் சமையல் அலுவலைப் பார்க்கிறேன்... "என்று விட்டு தேவி அம்மா சென்று விட,  

துரை அப்பாவும் 

"ஊர்க்கோழி ரெண்டு பிடிச்சு உரிச்சுவாறன்... நல்ல கறி வை.. " என்று சொல்லிக்கொண்டே சென்று விட,  "நானும்  . உங்களுக்கு சமைக்க உதவி செய்யிறன் அம்மா"  என்றபடி பாமதி அக்காவும் சென்று விட்டா.  மற்றவர்கள் ஆசுவாசமாக அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். 


"என்ன மாமா...திடீரென்று வந்திருக்கிறியள்?"  என்றேன். 


"தேவாதான்... சொன்னவன்,  பிள்ளை இண்டைக்கு ஊருக்கு, காணி பாக்கப் போறாய் எண்டு... அதுதான் உன்னட்டை சில விசயங்கள் கதைக்கவேணும் எண்டு உடனே வெளிக்கிட்டு லந்திட்டம்.... " 


நான் தேவமித்திரனைப் பார்த்தேன். வண்ணமதியையும் கூட்டிக் கொண்டு வந்ததால் தேவமித்திரனிடம் சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தேன்.  


சனி,  ஞாயிறு தினங்களில் இனியன்,  அகரனோடு வண்ணமதியையும் சேர்த்து சங்கீத வகுப்பிற்கு அழைத்துச் செல்ல வருவார் என்பதால் சொல்லிவிட்டு வந்திருந்தேன். 


"சரி... மாமா.......இருங்கோ... நான் தோட்டத்திலை கொஞ்சம் காய்கறிகள் பிடுங்கிக்கொண்டு வாறன்..... " என்று  எழுந்தேன். 


"சமர்... நானும் வாறன்.... "என்று கூறியபடி தேவமித்திரனும் என்னோடு வந்தார். 


அப்போது,  விளையாடிக் கொண்டிருந்துவிட்டு ஓடி வந்த வண்ணமதி... அகரனையும் இனியனையும் கூட்டிச் சென்று விட  மாமாவும் பார்கவியும் மட்டும் இருந்தனர். 


நான் வீட்டிற்குள் சென்று,  மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலை எடுத்து வந்து மாமாவிடம் கொடுத்தேன்.  


"அடடா.. நல்ல வேலை செய்தாயம்மா... ... தா..தா.. நான் வாசிக்கிறேன் " என்று மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார். 


"பார்கவி... நீங்களும் வாங்கோவன்... தோட்டத்துக்குப் போட்டு வருவம்..." என்றேன். 

"இல்லை... நான்... சமையலுக்கு உதவி செய்யிறன்... நீங்கள் போய் வாங்கோ... சமர்.. " என்றதும் தலையை ஆட்டிவிட்டு தேவமித்திரனும் கூட வர தோட்டத்திற்கு விரைந்தேன். 


காய்கறித் தோட்டத்தைப் பார்த்த தேவமித்திரன்,  

"எல்லா மரக்கறியும் கிடக்கு போல,   நீ கெட்டிக்காரிதான் சமர்... அதுமட்டுமில்லை... வித்தியாசமான சிந்தனைகளின் சொந்தக்காரி"  என்றார். 


நான் மெல்ல புன்னகைத்துவிட்டு, "இருக்கிறது ஒரு வாழ்க்கை,  அதை அழகா,  நமக்கு பிடிச்ச மாதிரி, அமைதியா நிம்மதியா மற்றவர்களைத் துன்புறுத்தாமல், வாழ்ந்து விட்டு போகவேண்டியதுதான்... " என்றேன். 


"தத்துவம் எல்லாம் கதைக்கிறாய்... " என்றார். 

"சீச்சீ... அப்பிடி எல்லாம் இல்லை... ஏதோ... மனதிலை வந்ததைச் சொன்னன்... " என்றேன். 

கதையோடையே காய்கறிகள்,  பச்சை மிளகாய் என எல்லாவற்றையும் பிடுங்கி விட்டோம்.  தேவமித்திரனும் என்னோடு சேர்ந்து பிடுங்கித் தந்தார். 


"போவமா? " என்றேன். 

"பொறு... சமர்... நான் உன்னட்டை கொஞ்சம் கதைக்கவேணும்... இதை.."

 என்று விட்டு அலைபேசியில் பார்கவியை அழைத்து தோட்டத்திற்கு வந்துவிட்டுப் போகச்சொல்லவும் ஐந்தே நிமிடத்தில் அங்கே வந்து சேர்ந்த பார்கவி,  சிரித்தபடியே காய்கறி கூடையை வாங்கிக்கொண்டு சென்றுவிட நாங்கள் இருவரும் தனித்து நின்றோம். 


நாங்கள் நின்று கொண்டிருந்த பலா மரத்தின் கீழே,  இரண்டு குற்றிகள் போடப்பட்டிருந்தது.  


துரை அப்பா ஒரு கலை நுணுக்கம் கொண்ட மனிதர்.  கழிவுகளாக விடப்படுகின்றவைகளில் இருந்து பொருட்கள் தயாரிப்பதென்றால் அவருக்கு சரியான விருப்பம்.  அப்படித்தான் கழிவு குற்றியில் இருந்து இருக்கை செய்து மரத்துக்கு கீழே போட்டிருந்தார்.  


"இருங்கோ... " என்று விட்டு நானும் அமர்ந்து கொண்டேன். 

சபையல் கூடத்தில் இருந்து இறால் பொரிக்கிற வாசனை மூக்கில் வந்து மோதியது. 



தீ தொடரும்... 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt












கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.