இன்று சர்வதேச தேயிலை தினம்!

 


ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21 ஆம் திகதி சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச தேயிலை தினமானது தேயிலை மற்றும் தேயிலை தொழிலில் பணிபுரிபவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிலில் உள்ளவர்களின் கஷ்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் அஸாம் மாநில தேயிலைத் தோட்டத்தில் சீன தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் முன்னெடுத்த சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச தேயிலை தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்காளதேஷ், கென்யா, மலாவி, மலேசியா, உகண்டா, தன்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005 ஆம் ஆண்டு முதல் சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தேநீரில் பல ஆரோக்கிய நன்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து ரீதியாக, தேநீரில் புரதங்கள், பாலிசாக்கரைடுகள், பாலிபினால்கள், தாதுக்கள், அமினோ மற்றும் கரிம அமிலங்கள், லிக்னின் மற்றும் மெத்தில்க்சாந்தின்கள் (காஃபின், தியோபிலின் மற்றும் தியோப்ரோமைன்) உள்ளன. தேநீரின் ஆரோக்கிய நன்மைகள் நம் உடலில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படும் பைட்டோ கெமிக்கல்களிலிருந்து வருகின்றன. தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

மேலும், இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. எலும்புகளைப் பாதுகாக்கிறது மற்றும் எடை குறைப்புக்கு முக்கியமான காரணியாக உள்ளது.

இலங்கையில் 1867 ஆம் ஆண்டு லூல்கந்துரை பெருந்தோட்டத்தில் ஜேம்ஸ் டெய்லரினால் ஆரம்பிக்கப்பட்ட தேயிலைச் செய்கை இன்று மலையகம் முழுவதும் வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.