பாதாம் பிசின் பால் சர்பத் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்


♦️பாதாம் பிசின் – 5

♦️பாதாம் பருப்பு – 15

♦️பால் – 1/2 லிட்டர்

♦️பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்

♦️ஏலக்காய் – 2

♦️பழங்கள் – விருப்பத்திற்கு ஏற்ப


செய்முறை

முதல் நாள் இரவே பாதாம் பிசினில் ஐந்து துண்டுகளை எடுத்து நன்றாக கழுவி விட்டு ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் பாதாமை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து விடுங்கள்.


இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பாலை ஊற்றி குறைந்த தீயில் வைத்து பாலை கொதிக்க விட வேண்டும். நம் ஊற வைத்திருக்கும் பாதாமை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு கேரட், பீட்ரூட் உரசுவது போல் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பாலை அவ்வப்பொழுது கிண்டி விட்டுக் கொண்டே இருங்கள். இல்லை எனில் மேலே ஆடை விழுந்து விடும். ஆடை விழுகாத அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள்.


பாதாமை முழுவதுமாக துருவி முடித்த பிறகு இந்த பாதாமை பாலில் சேர்த்து விட வேண்டும். அடுத்ததாக இனிப்பிற்காக பனங்கற்கண்டு ரெண்டு ஸ்பூனை சேர்த்துக் கொள்ளுங்கள். பனங்கற்கண்டு இல்லாதவர்கள் நாட்டுச்சர்க்கரை அல்லது சர்க்கரை கூட சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு ஏலக்காயை இடித்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெண்ணிலா எசன்ஸ் கூட அதில் ஊற்றிக் கொள்ளலாம்.


இந்த பாலானது அரை லிட்டரில் இருந்து கால் லிட்டராக சுண்டும் வரை அடுப்பில் குறைந்த தீயிலேயே இருக்க வேண்டும். அவ்வப்பொழுது கிண்டி கொண்டே இருக்க வேண்டும். கால் லிட்டர் ஆன பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த பாலை ஆற வைத்துக் கொள்ளுங்கள். பால் நன்றாக ஆறியதும் இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து நாம் எந்த டம்ளரில் பால் சர்பத்து தர போகிறோமோ அந்த டம்ளரை எடுத்துக் கொள்ள வேண்டும்.


அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாதாம் பிசினில் இருந்து 5 ஸ்பூனை எடுத்து போட வேண்டும். ஆப்பிள், மாதுளம், திராட்சை பழம் என்று உங்களிடம் எந்த பழங்கள் இருந்தாலும் அந்த பழங்களில் சிறிதளவு மட்டும் உள்ளே போட்டுவிட்டு நாம் பிரிட்ஜில் இருந்து எடுத்து வைத்திருந்த அந்த பாதாம் பாலையும் இதில் ஊற்றி பாதாமை நீலவாக்கில் நறுக்கி அலங்காரத்திற்காக தூவி விட்டு கொடுக்கலாம். மிகவும் சுவையான அதே சமயம் சத்து மிகுந்த ஆரோக்கியமான பாதாம் பிசின் பால் சர்பத் தயாராகிவிட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.