ஈரத்தீ ( கோபிகை) - பாகம் 40!!
மாலை மெல்ல மயங்கிக் கொண்டிருந்தது. பறவைகள் கூடடைவதற்கு ஆயத்தமாக இருப்பிடம் திரும்பிக்கொண்டிருந்தன.
வெய்யோன் தன் வெண் கதிர்களை வீசியபடி, மஞ்சள் நிறத்தைப் போர்த்தத் தொடங்கினான்.
வெளியே கேட்ட பேச்சுக்குரல்கள் வேறு ஆட்களும் வந்திருப்பதை உணர்த்தியது.
வர்ணன் அண்ணாவின் தமையன் தான் சீலன் அண்ணா.
அவருடைய மனைவிக்கான காணி ஒன்று இருந்தது. அவா முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டதால் அவருடைய உறவுகள் சட்டப்படி அந்தக் காணியை சீலன் அண்ணாவுக்கு மாற்றிக் கொடுக்க ஆசைப்பட்டதால் அதைப்பற்றித்தான் கேட்க வந்திருந்தார் சீலன் அண்ணா.
எல்லோருக்கும் பால் கோப்பி கலந்து எடுத்துக்கொண்டு வெளியேவந்தேன்.
சீலன்அண்ணா, என்னைக் கண்டதும்
"சமர்க்கனி .... சுகமா இருக்கிறியளே, எப்ப வந்தனீங்கள்.. " என்றார்.
"ஓமண்ணா.. நல்ல சுகம், நான் இப்ப கொஞ்சம் முதல் தான் வந்தனான், மாமாவைக் கனநாள் பாக்கேல்லை, அதுதான் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தனான்... " நானாகவே இப்படிச் சொல்ல, எல்லோருமே சிரித்துவிட்டனர்.
நான் வெட்கப்புன்னகையோடு, அகரன், வண்ணமதி இருவருக்கும் தேநீர் கொடுத்து விட்டு நானும் ஒரு தேநீர்க் குவளையுடன் வந்து அமர்ந்து கொண்டேன்.
நால்வருமாக பல விடயங்களைப் பேசி, பேச்சு ஆரம்ப போராட்ட காலத்தில் வந்து நின்றது.
" என்னத்தைச் சொல்லுறது தேவா, அப்ப அப்பாவுக்கு பேச்சு மூச்செல்லாம் அதுதான், ஆரம்ப காலங்களிலை நிறைய அண்ணாக்கள் வீட்ட வருவினம், அம்மா உத்தியோகம்தான் எண்டாலும் வீட்டிலே சமைச்சு சாப்பாடு வைக்காமல் விடமாட்டா, அவையளளோடை வளர்ந்ததிலை நாங்களும் அதுக்குள்ளயே ஊறிப்போனம்."
" ஓமண்ணா...ஆரம்ப காலங்களிலை மக்கள் தானே முழு ஆதரவு, " என்ற தேவமித்திரனிடம்
" ஓமோம்... .. அப்ப இந்திய இராணுவம் இங்கு வந்து செய்த கெடுபிடிகள் கொஞ்சநஞ்சமில்லை...
நாங்கள் எல்லாம் தப்பினதே அருந்தப்பு...
நாங்கள் ஹாட்லியிலை தானே படிச்சனாங்கள்.. ஒருநாள் பள்ளிக்குடம் போய் வரேக்கே எங்களை எல்லாம் மறிச்சுப் போட்டாங்கள்... "
"பிறகு... "
"அண்டைக்கு உங்காலை யாழ்ப்பாணப் பக்கம், ஆக்களுக்கு எங்கையோ நல்ல அடி விழுந்திட்டுத் போல, அந்த வேக்காட்டிலை, பருத்துறையாலை வந்த சனங்களை மந்திகையிலை வைச்சு மறிச்சுப் போட்டாங்கள்...அதிலை கொஞ்சம மேசன்மார் வேலை முடிஞ்சு வந்தவர்கள்.. எங்களை எல்லாம் முட்டுக்லிலை இருக்க வைச்சிட்டாங்கள், பெரிய அண்ணாக்கள் சில பேருக்கு கன்னத்திலை ஆடிச்சவங்கள்... பாவம் அண்ணாக்கள்... அதிலை எங்கட அண்ணாவும் இருந்தவர், எல்லாரும் அடியில் சுருண்டு போச்சினம்... "
"பிறகென்ன நடந்தது சீலன் அண்ணா...? " ஆர்வ மிகுதியால் விரைவாகக் கேட்டேன்.
" பிறகென்ன... 2 மணித்தியாலமா வைச்சிருந்திட்டு, எல்லாரையும் ஏதோ செய்யத்தான் ஆயத்தம் செய்தவங்கள்... அதுக்கிடையிலை மேலிடத்தில் இருந்து மாணவர்களை அனுப்பச் சொல்லி கட்டளை வந்ததும் எங்களைப் போகச்சொன்னவங்கள்...
அண்ணாக்களுக்குச் சரியான கோபம், முறைச்சுப் பாக்க, திரும்பவும் அடிச்சுப் போட்டாங்கள்... நாங்கள் சின்ன ஆக்கள் தானே, பேசாமல் முழிச்சுக் கொண்டு நிண்டம்...
நான் போய் அண்ணாவைக் கையைப் பிடிச்சு இழுக்க, எல்லாருமாச் சேர்ந்து வந்திட்டினம்...
அடுத்த நாள் நாளிதழிலை மேசன்மார் படுகொலை என்று செய்தி இருந்தது ..." பெருமூச்சோடு சொல்லி முடித்தார்.
அண்ணா... அவங்களுக்கு எங்கட ஆக்கள் நல்ல சாப்பாடு குடுத்து தானே அனுப்பினவையள்...
ஓமோம்.. அவையள் வந்த உடனே போட்ட அட்டகாசத்துக்கு பிறகு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான் போனவையள்...
தலையாட்டியை வைச்சுக் கொண்டு கொஞ்சநஞ்ச அநியாயமே செய்தவங்கள்...
மந்திகையிலை தான் எங்கட சொந்தக்காரப் பெடியன் ஒருத்தனையும் சுட்டவங்கள்....அதிலைதான் பாமதியின்ரை தகப்பனும் செத்தவர், இந்திய ஆக்கிரமிப்பு படைகள் தான் சுட்டவங்கள்...
என்ற மாமாவிடம்
'ஆரைச் சொல்லுறியள் அப்பா?' என்றார் தேவமித்திரன்.
"அப்ப நீ சின்னப்பெடியன், உனக்கு நினைவு இருக்கோ தெரியேல்லை.... எங்கட வீட்டுக்குப் பின்னாலை முருகேசு எண்டு... அவன் ஒரே ஒரு பெடியன் தான், அந்தத் துக்கத்திலை தாய் தகப்பனும் போய்ச் சேந்திட்டுதுகள்... "
அமைதிப்படையாக வந்து அநியாயம் செய்து கடைசியிலை உண்ணாவிரதம் இருந்த திலீபன் அண்ணாவுக்கும் ஒரு முடிவு கட்டிப்போட்டாங்கள், காந்தி தேசத்திலை கருணை இல்லை எண்டுறதும் புத்தரின் பிள்ளைகளிடம் அன்பே கிடையாது எண்டுறதும் தமிழ் மக்கள் உணர்ந்த உண்மை தானே.
"எத்தினை அநியாயங்களைச் செய்தாங்கள்... எங்கட வீட்ட ஒருக்கா சோதனைக்கென்று வந்திட்டுச் சித்தியை அறைக்குள்ளேயே தன்னோடு நிக்கச் சொல்லிப் போட்டான் தலைமையாளா வந்தவன்.
அம்மா கதைச்சுப் பாத்திட்டு ஏலாமல் நிக்க எதேச்சையாக கொமாண்டர் வந்திட்டார்.
பிறகு அவரட்டைக் கதைச்சுத்தான் அவர் சொல்லி, அறையைத் திறந்து வெளியே விட்டவன். அப்பவும், இடுப்பிலை துவக்காலை அடிச்சுப்போட்டான்... "
"நாங்கள் அந்த நாள் முதல் அனுபவிச்ச துயரங்கள் கொஞ்சமே... இன்னும்தான் விடிவு கிடைச்சபாடில்லை... "
சீலன் அண்ணா சொல்லிக் கொண்டிருக்க மேகவர்ணன் அண்ணாவின் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.
"சரி... தம்பி வந்திட்டான்... நான் வெளிக்கிடுறன் தேவா... " என்றபடி எழப்போனவரிடம்
"பொறுங்கோ அண்ணா.. அவன் உள்ள வரட்டும்... நாங்கள் எல்லோரும் தேநீர் குடிச்சிட்டம்... அவனும் குடிக்கட்டும்..." என்றதும்
அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த மேகவர்ணன் அண்ணா,
"இல்லை.. நேரம் போகுது... நான் பிறகு ஒருநாள் குடிக்கிறன் "
என்றவர்,
என்னைப் பார்த்து விட்டு
"தாங்கள் எப்ப வந்தது வைத்தியர்? " என்று கேட்டார்.
"பின்னேரமாத்தான் அண்ணா" என்றேன்.
"டேய்.. மச்சான்... பால் கோப்பியை வேண்டாம் எண்டு சொல்லுறாய், ஆர் போட்டது எண்டு தெரியாமல் கதைக்கிறாய், உன்ரை தங்கச்சிதான்...." என்றார்.
நான் சிரிக்க,
"சரி.. தங்கச்சியம்மா... போட்டுக்கொண்டு வா" என்றபடி கதிரையில் அமர்ந்து கொண்டார்.
நானும் விரைந்து சென்று பால் கலந்து கோப்பி கொண்டு வந்து கொடுத்தேன்.
எல்லோருமாக கதைத்துக் கொண்டிருந்துவிட்டு மேகவர்ணன் அண்ணாவும் சீலன் அண்ணாவும் வெளிக்கிட நானும் புறப்பட ஆயத்தமாகினேன்.
அருகில் வந்த தேவமித்திரன்,
"இரவுக்கு என்ன சாப்பாடு சமர் ?" என்றார்.
"போய் ஏதும் செய்யிறன்" என்று விட்டு
"உங்கள் மூன்று பேருக்கும் புட்டு அவிச்சு வைச்சிருக்கிறன் " என்றேன்.
"ஏனம்மா.. உனக்கும் சேர்த்து அவிச்சிருக்கலாமே?" என்றார் மாமா.
"அவா... நாங்கள் சொல்லாமல் செய்ய மாட்டா... "என்றார் தேவமித்திரன் நக்கலாக.
"இல்லை... நேரம் போடும்.. என்று தான்.. " நான் இழுக்க.
"சரி.. வா.. அதிலே போய் பாமதி அக்காட்ட சாப்பாடு லாங்கிக்கொண்டு போவம் " என்றார்.
"நான் வாங்கிக் கொண்டு போறன்... " என்றேன்.
"நான் கொண்டு வந்து விட்டுட்டு வாறன்... பேசாமல் வாங்கோ..." என்றார்.
நான் நிமிர்ந்து பார்த்தேன், எதுவும் பேசக்கூடாது என்ற கண்டிப்பு இருந்தது அவரது பார்வையில்.
"அகரன் அண்ணா போட்டுவாறன்.... தாத்தா போட்டுவாறன் " ஓடி ஓடிச் சொல்லிக்கொண்டிருந்த வண்ணமதியைப் பார்த்து நாங்கள் இருவரும் சிரித்தோம்.
நானும் மாமாவிடமும் அகரனிடமும் சொல்லிவிட்டு வந்து, அவரோடு வெளிக்கிட்டோம்.
தீ தொடரும்....
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை