பிரபல ஆலயத்தில் நகைகள் மாயம்!!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (12) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி பிரதான வழியாக முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலயத்தின் முகவாயிலில், பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை வீதிக்கு கொண்டுவா என கோஷங்களை எழுப்பியவாறு ஆண், பெண் இருபாலரும் சிதறு தேங்காய் உடைத்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆலயத்தின் பணப்பெட்டித் திறப்பு தொலைந்து விட்டதாக தலைவரால் சிலருக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் அது தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கோ உபயகாரர்களுக்கோ ஆலயத்தின் தலைவரால் தகவல் வழங்கப்படவில்லை. சில நாட்களின் பின்னர் குறித்த பணப் பெட்டியில் இருந்த நகைகள் பணம் என்பன காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அது தொடர்பில் தலைவரிடம் வினவிய மக்கள் பூட்டு உடைக்கப்படாமல் எவ்வாறு பெட்டியில் இருந்த நகைகள் பணம் காணாமல் போனது என கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு தெரியாது என ஆலய தலைவர் பதிலளித்தார்.
எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளையும் பணங்களையும் திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை