அரகலய போல பங்களாதேசில் வன்முறை! அடுத்து இலங்கையா?
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று (05) தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களது சொத்துகள் தீயிடப்பட்டு , சூறையாடப்பட்டு , அரசியல் ஆதரவாளர்கள் கொலை செய்யப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் வழி தெரியவருகிறது.
இராணுவம் நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. ஆனால் இந்த போராட்டத்துக்கு பின்னால் , சீனாவும் , பாகிஸ்தானும் இருப்பதாக அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனா இந்தியாவோடு நெருக்கமாக பொருளாதார உறவை வளர்த்து வந்தார். இதேநேரம் அமெரிக்க தளம் ஒன்றை அமைக்க அனுமதி கேட்ட போது , ஷேக் ஹசீனா அதை ஏற்கவில்லை. அதேபோல அண்மையில் ஷேக் ஹசீனா சீனாவுக்கு சென்ற போது , அவர்கள் கேட்ட விடயங்களை அவர் செய்ய மறுத்துள்ளார்.
இந்த போராட்டத்தின் ஆரம்பம் என்ன?
பொதுத்துறையில் வேலைக்குச் சேர குறிப்பிட்ட பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறை பங்களாதேஷில் இருந்தது. அதை நீக்க வலியுறுத்தி அங்கு சில வாரங்களாகப் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் பங்களாதேஷில் தகுதி அடிப்படையில் அரசாங்க வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
இருப்பினும் அந்த போராட்ட வேகத்தோடு ஷேக் ஹசீனா அரசை இல்லாமல் செய்ய , சிலநாள் அமைதிக்கு பின் ஆரம்பமான போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
இலங்கை அரகலய காலத்தில் , ஆரம்பகாலத்தில் பெரிய வன்முறையாக போராட்டம் இருக்கவில்லை. ராஜபக்சவினர் , காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்திய பின்னே வன்முறையாக மாறியது.
கொழும்பில் கோட்டாவை துரத்தி அரச தலைவர்களது கட்டிடங்களை , காலிமுகத்திடலில் போராடியோர் ஆக்கிரமித்தாலும் , மிக நாகரீகமாக அவற்றை பாதுகாத்தனர்.
கொழும்புக்கு வெளியே வீடுகளுக்கு தீ வைத்து , பலரை தாக்கியதோடு , ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்தது இன்னொரு சாரார்.
கோட்டாபய தப்பி ஓடிய பின் , பிரதமராக இருந்த ரணில் வன்முறைகளை பரவ விடாது , படையினரை வைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு , அரகலய போராட்டக்காரர்களை நீர்த்து போகச் செய்தார். இது பழைய கதை .
அதே வெறியோடு பழி வாங்க உள்ள சிலர் , தேர்தல் முடிவுக்கு பின் எதிரிகளை பழி வாங்குவதாக எண்ணி , வன்முறையில் இறங்கினால் , பங்களாதேஷ் சம்பவங்களை விட மோசமான சம்பவங்களை நாம் அனுபவிக்க வேண்டி வரலாம்?
ஜீவன்
கருத்துகள் இல்லை