அவசியம் படியுங்கள்!!




 கதை தான் என்றாலும், நம்மை ஒத்த கதாபாத்திரங்களை திரையில் பார்க்கும் போது நம்மையறியாமல் ஒரு சந்தோசம் வரும். அப்படியாக சமீபத்தில் Wild tales Spanish மொழி  படத்தில் வந்த கடைசி கதை அப்படியே ஒன்ற வைத்தது.


பெண்கள் பெரும்பாலும் உணர்வுமயமானவர்கள். அவ்வப்போது அவர்களை ஆட்டி படைக்கும் உணர்ச்சிகளுக்கு தகுந்தவாறு கட்டுடைத்தலை வெகு எளிதில் நடத்தி சுற்றி இருப்போரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு, அப்படி ஒன்றை நிகழ்த்தியதற்கான அறிகுறிகளே இல்லாமல் வெகு சாதாரணமாக இருப்பது ஆண்களை எப்போதும் அதிர செய்து கொண்டே இருக்கும். 


ஆரம்பகாலங்களில் வீட்டில் என் கணவருக்கும் எனக்கும் சண்டை நடக்கும் போது, கொஞ்சம் வளர்ந்த பின் என் பிள்ளைகளுக்கும் எனக்கும் சண்டை நடக்கும்போதும் கோவத்தின் உச்சத்தில் கிட்டத்தட்ட வெடித்து சிதறுவேன். 90% கூலாக, ஜாலியாக பெரிய விஷயத்தை கூட சாதாரணமாக எடுத்து கொள்ளும் நான் எதற்காக சின்ன விஷயத்திற்கு வெடித்து ரகளை செய்கிறேன் என எனக்கும் தெரியாது வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாது.. ஆனால் வெடித்து ரகளை செய்து சில நேரங்களில் அழுது ஓய்ந்த பின் (அதிகபட்சம் 10 – 30 நிமிடங்கள், சில சமயம் ஓரிரு மணி நேரம்) கூலாக ஒன்றுமே நடக்காதது போல டிவியில் ஓடும் பாட்டுக்கு பின்பாட்டு பாடுவேன் அல்லது அபிநயம் பிடிப்பேன். வெகு சாதாரணமாக சமைக்க போய்விடுவேன்


ஆனால் நான் அழுதது ரகளை அடித்ததை பற்றி மூச் கூட விடக்கூடாது . வெகு நார்மலாக இருப்பேன், என் கணவரும் பிள்ளைகளும் நன்கு புரிந்தவர்கள் ஆதலால், நான் கோவமாக கத்தும்போது விட்டுவிடுவார்கள். நான் அமைதியடைந்த பின் தான் அந்த டாபிக்கை திரும்ப பேசுவார்கள். கிட்டத்தட்ட இதே போல ஒரு பெண்ணை திரையில் பார்க்கும்போது எப்படி இருக்கும். என் கணவரும், என் பிள்ளைகளும் இந்த படத்தை பார்த்தால் என்னை பயங்கரமாக ஓட்டக்கூடும். நிற்க 


இந்த கதை நாயகன் நாயகி திருமணத்தில் தொடங்குகிறது. திருமண விருந்தில் நாயகிக்கு தோழி ஒருவருடன் கணவருக்கு தொடர்பிருந்தது தெரிய வர மனமுடைந்து போகிறாள். வெறுத்துபோய் தற்கொலை செய்து கொள்ள பார்ட்டி நடக்கும் ஹோட்டல் மொட்டை மாடிக்கு விரைகிறாள். அங்கு ஒருவன் அவளை தடுத்து ஆறுதல்படுத்த அவனுடன் உறவு கொள்கிறாள். இதனிடையே மனைவியை சமாதானப்படுத்த அவளை தேடி ஓடி வரும் கணவன், அவளை வேறு ஒருவனுடன் பார்த்து அதிர்ந்து போகிறான். 


அப்போது நாயகி கோவத்தின் உச்சியில், உன்னை சும்மா விட மாட்டேன், உன் மனைவியாக உன் மானத்தை எப்படியெல்லாம் வாங்குகிறேன் பார் என கணவரிடம் வெடிக்கிறாள். பின்னர் மெல்ல கீழே இறங்கி பார்ட்டி நடக்கும் ஹாலுக்கு வரும் அவள் ஆவேசம் அடங்காமல் செய்யும் அதகளி கண்டு வந்த விருந்தினர்கள் பயப்பட, கணவன் மண்டியிட்டு கதறி அழுகிறான். 


அப்படியும் சமாதானம் ஆகாமல் கேக்கை தள்ளி உடைத்து கிட்டத்தட்ட ஹிஸ்டீரியா வந்தவள் போல பேயாட்டம் ஆடி ஒருவழியாக அமர்ந்து அழுகிறாள், அதற்குள் மருத்துவர்கள் வருகிறார்கள். அவர்கள் பரிசோதனை செய்ய வர , மருத்துவர்களை விலக்கி அவளால் அதிகம் காயம்பட்ட நாயகன் எழுந்து வருகிறான். நாயகிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களையும் விலக்கி, அவளை கைப்பிடித்து அழைத்து வந்து அவளை அணைத்து நடனம் ஆட துவங்குகிறான். அவ்வளவு நேரம் அத்தனை பேரையும் பீதியில் உறைய வைத்த நாயகி, கூலாக அவனுடன் நடமாட தொடங்குகிறாள். அதிகம் சினிமாவில் வெளிப்படுத்தாத மிக மிக நுட்பமான  பெண்ணின் உணர்வை இந்த கதையில் வெளிப்படுத்தியிருப்பதாக பார்க்கிறேன். 


பெண்களின் இந்த உணர்வு பகுதியை சரியாக கையாள தெரிந்த ஆண், பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலை என ஒப்பாரி வைக்கமாட்டான்.


கமலி பன்னீர்செல்வம் 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.