நாளை மகாளய பட்சம் 2024 ஆரம்பம்!

 


நாளை மகாளய பட்சம் 2024 ஆரம்பம் : பித்ருக்களுக்கு எதற்காக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?


மகாளய பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவாகும். புரட்டாசி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சத்தின் நிறைவாக வரும் அமாவாசைக்கு, மகாளய அமாவாசை என்று பெயர். மற்ற மாதங்களில் வரும் அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் அது யாருடைய பெயரை சொல்லி கொடுக்கிறார்களோ அவர்களை மட்டும் போய் சேரும்.


மகாளய பட்சத்தின் 15 நாட்களும் திதி கொடுத்து, தர்ப்பணம் கொடுக்கலாம். தானங்கள் வழங்கலாம். இந்த 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களை சென்றடையும். இதனால் எவர் ஒருவர் மனக்குறையுடன் இறந்து இருந்தாலும் அந்த ஆத்மா சாந்த அடைந்து, நற்கதி அடையும்.


மகாளய பட்சம் 2024 :


புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் முன்னோர் வழிபாட்டுடன் தொடர்புடையதாகும். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்களை மகாளய பட்சம் என்கிறோம். மகாளய என்றால் ஒன்றாக கூடி வருதல் என்று பொருள். நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு பூமிக்கு வந்து, நம்முடைய பூஜைகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலம் மகாளய பட்ச காலமாகும். முன்னோர்களுக்கு செய்யப்படும் வழிபாட்டில் நாள் கணக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். அதனாலேயே மகாபட்சமும் 15 நாட்கள் கொண்ட விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 18ம் தேதி துவங்கி, அக்டோபர் 01ம் தேதி வரை உள்ளது.


முன்னோர் வழிபாட்டு கணக்கின் காரணம் :


ஒருவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்த பிறகு அந்த உயிர், பிரேத உலகில் இருந்து பித்ரு உலகத்திற்கு செல்வதற்கு 11 ஆகும். அதனால் தான் ஒருவர் இறந்த பிறகு 13 அல்லது 16 நாட்களுக்கு பிறகு காரியம் வைக்கிறார்கள். பித்ருலோகத்தில் இருந்து அந்த ஆத்மா சூரிய மண்டலம் அல்லது சந்திர மண்டலத்தை அடைய ஒரு வருடம் காலம் ஆகும். ஒரு வருட காலத்திற்கு பிறகு அந்த ஆத்மா தவது கர்ம வினைகளின் அடிப்படையில் சூரிய அல்லது சந்திர மண்டலங்களுக்கு செல்லும். அந்த ஆத்மாவானது சூரிய மண்டலத்திற்கு சென்றால் இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தி அடைந்து விடும். ஒருவேளை அது சந்திர மண்டலத்திற்கு சென்றால் அந்த ஆத்மா மீண்டும் பூமியில் கர்ம வினைகளின் அடிப்படையில் பிறப்பு எடுக்கிறது.


பித்ருக்களுக்கு சொர்க்கம் :


ஒருவரின் ஆத்மா சூரிய அல்லது சந்திர மண்டலத்தை அடைந்த பிறகு தான் அந்த ஆத்மாவின் ஆயுட் சுயற்சி நிறைவடைகிறது. இதனால் தான் ஒருவர் இறந்த ஒரு வருடத்திற்கு பிறகே அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அந்த வீட்டில் ஒரு வருடத்திற்கு பிறகே சுப காரியங்கள் நடத்த கூடாது என சொல்லப்படுகிறது. அந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை அந்த ஆத்மா இறைவனை அடைய முடியாமலும், மீண்டும் பிறவி எடுக்க முடியாமலும் காற்றில் அலைந்து கொண்டிருக்கும். அந்த சமயத்தில் அதன் கஷ்டத்தை பொருட்படுத்தாமல், சுப காரியங்கள் செய்வதால் அந்த ஆத்மாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.


​ஆத்ம சாந்தி வழிபாடு :


ஒருவர் எப்படி இறந்திருந்தாலும், அந்த உயிர் உடலை விட்டு பிரியும் போது ஏதாவது மனக்குறையுடன் தான் உடலை விட்டு பிரிய மனம் இல்லாமல் செல்கிறது. இதனால் அந்த ஆத்மாவிற்கு அமைதி தருவதற்காக எமதர்ம ராஜா, ஒவ்வொரு ஆத்மாவை வருடத்திற்கு ஒரு முறை 15 நாட்கள் பூமிக்கு சென்று மனநிறைவு, மன மகிழ்ச்சியை பெற்று திரும்புவதற்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். அப்படி முன்னோர்கள் பூமிக்கு வந்து, இங்கு மன நிறைவு பெறுவதற்கான வழிகளை தேடும் காலமே மகாளய பட்சமாகும். அந்த நேரத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பணம், திதி ஆகியவை தான் அந்த ஆத்மாக்களை நிறைவடைய வைக்கும். அப்படி மனநிறைவு பெற்ற ஆத்மா, தன்னுடைய சந்ததிகளை வாழ்த்தி விட்டு சென்று முக்தியை அடையும்.


பித்ரு தர்ப்பணத்தின் முக்கியத்துவம் :


ஒருவேளை அந்த ஆத்மாவின் சந்ததியினர் யாரும் திதி, தர்ப்பணம் ஏதும் கொடுக்காமல் இருந்தால் அந்த ஆத்மா மனம் வருத்தப்படுவதாகும், கோபப்படுவதாலும் அது பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபமாக மாறுகிறது. இதன் விளைவாக நமக்கு பலவிதமான துன்பங்கள் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து விடுபட, நாம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வருடத்தின் மற்ற நாட்களில், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் அளிக்க மறந்திருந்தாலும், இந்த மகாளய பட்சம் காலத்தை பயன்படுத்தி தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள் ஏற்றுக் கொண்டு நமக்கு ஆசி வழங்குவதால், நம்முடைய குடும்பம் மட்டுமின்றி நம்முடைய சந்ததியே எந்த குறையும் இல்லாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.