காவோலைகள் அழுகின்றன...!.

 


தங்கள் குருத்துவ காலத்துக்

குதூகலப் பொழுதுகளையெண்ணி 

கண்கள் கசிகின்றன! - மனித

வாழ்க்கையென்னும் நெடுமரத்தில் உதிரப்போகும் காவோலைகள்...!.


இளங்குருத்துகளாய் முகம்நீட்டிய

நேற்றைய குருத்தோலைகள்தான்,

காலத்தின் கடுகதி ஓட்டத்திலின்று

பச்சையமிழந்த காவோலைகளாய்

காய்ந்து சுருண்டு தொங்குகின்றன...!.


பச்சை இலைகளின் மீதில்

பழுப்பு விழுவதெல்லாம்

இறைவன் படைப்பின் இயற்கை! - அதன்

பழுப்பை விலக்கிப் பசுமைகொடுக்க

பாரினில் ஏதுண்டு செயற்கை!.


சுட்டெரித்துச் சுருட்டிய வெயிலையும்,

சூறாவழியாய் சுழன்றடித்த காற்றையும்

எதிர்த்து வாழ்ந்துகடந்த பட்டறிவு - இந்தப் பழுத்தோலைகளுக்கு மட்டுமே

படிப்பினையானதாய் நிற்கின்றன...!


கனமழையில் ஊறிக்கடந்து,

பனிப் புகட்டலில் விறைத்துக்கிடந்த

கனத்த காலத்து அனுபவங்கள்! - இந்தக்

குருத்தோலைகளுக்கு இல்லை! - அவை காவோலைகளுக்கே உரித்துடையவை!.


அத்தகை காவோலைகளைப் பார்த்துப்

பல்லிழித்துக் கேலிசெய்யும் சில

இளவோலைகளைப் பார்த்து இன்னும்கூட

கண்ணீர் விடுகின்றன காவோலைகள்...,

இளவோலைகளின் எதிர்காலமெண்ணி...!


                                   வன்னியூர்- வரன் 

                                        14/10/2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.