கர்மா - சுரேஷ் தர்மா!!

 


இருண்டுபோன ஒரு முகத்தைப் போல மங்கிக்கிடந்தது அந்த மாலைப்பொழுது. எங்குமே ஒருவித மயான அமைதி குடிகொண்டிருந்தது. 


வெளியே பனி பொழிந்துகொண்டிருந்தது. கம்பளி ஆடைக்குள் மறைந்திருந்த எங்கள் தேகம் சூடேறிக்கிடந்தது. காரணம்...

மனத்தகிப்பும்தான்.


சற்றுத் தள்ளியிருந்த கதிரையில் மனைவி தேவிகா, மருமகள் சந்தனா இருவரும் துயரம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். 


அவர்களுக்கு எதிரே இருந்த கதிரையில் மகன் எழில்வேந்தன் அமர்ந்திருந்தான்.

வேதனை வழிந்த விழிகளோடு இருந்த அவனைப் பார்க்கும் போது இதயம் இரண்டாகப் பிளப்பது போல இருந்தது.


அவன் பிறந்து வளர்ந்த இவ்வளவு காலத்தில் அவனை இப்படிப் பார்த்ததே இல்லை நான்.


ஒரே மகனாக,  எங்கள் செல்ல மகனாக இருந்தவன். படிப்பு , விளையாட்டு, இசை, இலங்கியம் என யாவற்றிலுமே அவன் கெட்டிக்காரன். தன்னுடைய எதிர்கால கனவாக பொறியியல் துறையை அவன் தெரிவு செய்ய, எங்களுக்கும் பூரண மகிழ்ச்சி.


நாங்கள் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக இருந்தவன்.  பார்த்துப் பார்த்து வளர்த்து நல்ல இடத்தில் எங்கள் விருப்பப்படியே திருமணம் செய்து கொடுத்து நன்றாக வாழ்ந்தவன்.


காலம் இனிமையாகத்தான் கழிந்தது. ஆனால் ஏதோ ஒன்று சதி செய்து இன்று இப்படி நிற்கவைத்திருந்தது.


இதோ இன்று அவனுடைய மகனுக்காகத்தான் இப்படி வைத்தியசாலை வளாகத்தில் காத்திருக்கிறோம்.


பதினெட்டு வயதில் போதைக்கு அடிமையாகிவிட்டான்.


பேரன் இனியன் மீது எனக்கு இருந்த அன்பும் அக்கறையும் மகன் மீது இருந்ததைவிடச் சற்று அதிகம்தான்.


அவனும் படிப்பில் கெட்டிக்காரண்தான். 


சிறுவயது முதலே வசதிகளுக்கு குறைவில்லாத வாழ்க்கை. கஷ்டம் என்பதே அறியாமல் வளர்த்துவிட்டிருந்தோம்.


எழிலுக்கு இரண்டு பிள்ளைகள், 

மூத்தவன் இனியன், இரண்டாவது சாதனா...


இனியன் ஆண்பிள்ளை என்பதும் அவன் என்னைப் போலவே இருந்ததும் கூட அவன் மீதான எனது அதீத அக்கறைக்கு காரணமாக இருக்கலாம்.


படிக்கும் போதே அவன் கேட்பதெல்லாம் செய்வேன்...


சாதாரணதரம் முடித்ததுமே அவனுக்கு பெரிய ஆள் என்கிற நினைப்பு வர நாங்கள்தான் காரணம்.


அதிகமாக நாங்கள் கொடுத்த செல்லம் இன்று இப்படி ஒரு நிலையில் நிற்கவைத்திருந்தது.


உயர்தரத்தில் என் விருப்பப்படியே உயிரியல் பாடத்தில் கற்றவன்,  வேறு வேறு இடங்களில் கல்வி கற்கச் சென்ற போது, படிப்புத்தானே என எண்ணிவிட்டோம்.


ஆனால், எங்கோ ஒரு இடத்தில் அவனுக்கு கிடைத்த நண்பர்கள் பிழைத்துப்போய் இனியன் போதைக்கு அடிமையாகிவிட்டிருந்தான்.


ஆரம்பத்தில் கண்டிருந்தால் ஒரளவு மீட்டிருக்கலாம்,  இப்போது காலம் கைமீறி விட்டிருந்தது. 


அவசர சிகிச்சைப் பிரிவில் அவனை வைத்திருந்தனர். நாங்கள் வெளியே காத்திருக்கிறோம்.


அங்குமிங்குமாக ஒரு சிலர் வேற்றுமொழி உரையாடலுடன் நடந்துகொண்டிருந்தனர். 


தீப்பந்தமாய் எரிந்துகொண்டிருந்தது மனம். 


"அது....உந்தக் கர்மா சும்மா விடுமேடா...ஏதோ ஒரு காலத்திலை காட்டத்தான் செய்யும்...

அவனவன் செய்கிறதின்ரை கர்மா ஒருகாலமும் சும்மா விடாது..."

யாரோ சொல்லிச் சென்றது என் செவிப்பறைகளில் மோதி மனதை உலுக்கியது.


திடீரெனக்கேட்ட அந்த வார்த்தைகள் எனக்கே சொல்லப்பட்டது போல இதயம் இறுகிப்போனது.


காலம் எனக்கும் அப்படித்தான் வேட்டு வைத்திருக்கிறதா...


நினைவுகள் என்னைக் கடந்தகாலம் நோக்கி இழுத்துச் சென்றது.  


நான் ஒரு வைத்தியர்...அதாவது வைத்திய நிர்வாகி. 


நகரத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் எனது பொறுப்பென்பது அளப்பரியது.


பல கிராமத்து மக்களுக்கும் அதுதான் முக்கிய வைத்தியசாலை.  


வைத்திய தொழிலை நேசித்துத்தான் நான் மருத்துவபீடம் சென்றேன், சிறந்த முறையில் கல்வி கற்று வெளியேறினேன். 


எனது ஆழ் மனதின் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என இருந்த அந்த பெருந்தீயை எது அணைத்தது.


ஆரம்பத்தில் எனது முழு நேரமும் மக்களுக்கான சேவையாகத்தான் இருந்தது. ஆனால் தேவைகளும் காலங்களும் பிழைத்துப் போனபோது நானும் ஊழல் என்ற பெருஞ்சுழிக்குள் விழுந்துபோனேன்.


பணம் என்கிற மாய வலைக்குள் நானும் மாட்டிக்கொண்ட போது, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 


பணம் என்பது, மனிதன் தான் உருவாக்கிய     கூட்டுக்குள் தானே முடங்கிப் போகிற ஒரு துர்பாக்கிய நிலை என்பதை நான் உணர்கிற நிலைமை இப்போதுதான் வந்திருந்தது.


ஆரம்பத்தில் சிறுசிறு பணக்கையாடல் என்று தொடங்கி காலப்போக்கில் அது விரிந்து பெரியதொரு பள்ளத்தைப் போல என்னை இழுத்துக்கொண்டது.


அந்தக்காலங்களில் எனது வைத்தியசாலையில் எனக்கு தெரிந்தும் தெரியாமலும் நடந்த பல குற்றங்களுக்கு நானும் எனது நடவடிக்கைகளும் காரணமாகிவிட்டது.


மக்களைக் கவனிக்காது எனக்கு கீழே இருந்த பணியாளர்கள் செயற்பட்ட போது நான் எதுவும் கேட்கவில்லை...


எனது நிலைமை கேட்கக்கூடியதாக இருக்கவும் இல்லை...


நான் அவர்களைக் கேட்கப்போக, அவர்கள் என்னைக் கேள்வி கேட்டால் என்ன செய்வது என்கிற தயக்கம் வைத்தியசாலையே மக்களுக்கான இடமாக அல்லாமல் மக்கள் விசனப்படுகிற இடமாக மாறிப்போனது.


மற்ற நிறுவனங்களைப் போல அல்ல வைத்தியத்துறை, அது மக்களின் உயிர் காக்கிற இடம். வைத்தியர்களின் மீதான நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் தமது உயிரை எம் கையில் தந்துவிட்டு பேசாமல் இருக்கின்றனர். அந்த நம்பிக்கை சிதைவதென்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல.


என் உள்மனது சில நேரங்களில் குத்தத்தான் செய்தது. பதவிக்கான போட்டி, சக வைத்தியர் மீதான பொறாமை என்பன வைத்தியர்கள் மற்றும் தாநியர்களிடையே தலைதூக்கி எத்தனையோ அப்பாவி உயிர்கள் அநியாயப் பலியாக காரணமாயின.


கேள்வி கேட்கவும் தண்டனை கொடுக்கவுமான நிலையில் இருந்த நான் பேச்சற்றவன் போல இருக்க வேண்டிய சூழலைத் தந்தது. 


ஊழல் விவகாரங்கள் பெருகி எனது தனித்தன்மையை அது விழுங்கிவிட்டது என்பதை என்னால் உணரமுடிந்த போதும் அதைபற்றிய கவனத்தை என்னால் எடுக்க முடியவில்லை.


மக்களுக்கு எதிரானவனாக எனது விம்பம் மாறிவிட்டிருந்தது.வைத்தியசாலை விவகாரங்கள், மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நானே முழுக்குற்றவாளியாக பார்க்கப்பட்டேன். 


அதில் மக்கள் மீது ஏந்த தவறும் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. 


ஏனெனில் உயிரையோ  அங்கங்களையோ இழக்கிற போது,  அந்த வேதனையும் வலியும் வார்த்தைகளின் அளவுக்கு அப்பாற்பட்டது. 


 அந்த மக்களின் துடிப்புக்கு முன்னால் மற்ற அனைத்துமே வெற்றுச்சொல்தான். 


அவர்கள் கைதூக்கி காட்டுகிற போது நாங்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.


எத்தனை அழுகுரல்களைக் கடந்து போயிருக்கிறேன். அந்த இடத்தில் சிறு கனிவு கூட நான் காட்டியதில்லையே...


"ஏன் அப்படி நடந்துகொண்டேன்...?"

பணத்தை அதிகமதிகமாகச்  சம்பாதித்த வேகமும்  பணம் பற்றிய தேடலும் பெருகிய ஆடம்பர வாழ்க்கையும் எனது மனிதாபிமானத்தை விழுங்கி விட்டிருந்ததா...


கால ஓட்டம் என்னை அடையாளப்படுத்தி எனது இருப்பைக் கேள்விக்குறியாக்கியது. 


மக்களின் மாபெரும் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் நான் எனது பதவியை இராஜிநாமா செய்துவிட்டு புலம்பெயர்ந்து விட்டேன்.


இப்போது இருபது வருடங்களாக நோர்வே நாட்டில் நான் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

எனது மண் என்கிற அந்த ஆழ்துடிப்பை நான் இழந்தது சாதாரண விடயமல்ல. 


அக்காலத்தில் பணம் தந்த எந்த சுகமும் எனது இன்றைய வெறுமையை ஈடுசெய்யாது. 


கடைசியில் என்னைக்கடந்து சென்றவர்கள்  சொன்னது போல, இந்தக் கர்மா எனது பேரனுக்கு பெரிய இடியை இறக்கிவிட்டுள்ளதா.


யோசனையில் ஆழ்ந்திருந்த வேளை,  வைத்தியர் ஒருவர் தெய்வத்தைப்போல வெளிப்பட்டார்.

எத்தனையோ தடவை, பலர் இவ்வாறான நிலையில் நிற்கிற போது நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் நடந்து போயிருக்கிறேன்.


இப்போது...


மனம் இறைவனை வேண்டியது.....கண்ணீர்    தழும்பியது...


மகன், மருமகள், மனைவி மூவருடனும் நானும் வாசலை நோக்கி நடந்தேன்.


"வைத்தியர்.... " 

எனது மகன் கலங்கிய குரலில் கேட்கவும் அவரது முகத்தில் தெரிந்த முகபாவனையிலேயே  ஏதோ கேட்கக்கூடாத விசயத்தை அவர் சொல்லப்போகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.


இத்தனை காலமும் நான் அனுபவித்தறியாக துயரநிலை மனதைக்கனக்க வைத்தது.


"எழில் வேந்தன்...உங்கள் மகனைக் காப்பாற்ற முடியவில்லை..." தோய்ந்து ஒலித்த அந்த மெல்லிய குரல் எனக்குள்ளே ஊடுருவவும் எனது நினைவுகள் மெல்ல மழுங்கிக் கொண்டிருந்தது.


எழுத்து - சுரேஷ் தர்மா



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.