ஒருவர் இருக்கும் வரை...

 


பசியறிந்து சோறு போட 

ஒருவர் இருக்கும் வரை...

சாப்பிட்டாயா எனக்கேட்க 

ஒருவர்  இருக்கும் வரை...


தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க

ஒருவர் இருக்கும் வரை....

நோய் வருத்தும் இரவுகளில் 

கண் விழித்துப் பார்த்துக்கொள்ள ஒருவர் இருக்கும் வரை...


குரல் மாறுபாட்டில் மனநிலையைக் கணிக்க

ஒருவர் இருக்கும் வரை...

போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என 

வழியனுப்ப 

ஒருவர் இருக்கும் வரை...


வீடடையக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை...

தோற்றுப்போய் திரும்புகையில் 

தோள்சாய்த்துக்கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை...


போ என்றாலும் விட்டுப்போகாது

சண்டை போட்டுக்கொண்டேனும் 

உடனிருக்க 

ஒருவர் இருக்கும் வரை...

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை....


நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க 

ஒருவர் இருக்கும் வரை...

எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத

ஒருவர் இருக்கும் வரை...


கூட்டத்தின் நடுவே தனித்துப்போகையில் கரங்கள் பற்றி 

நானிருக்கிறேனென உணர்த்த

ஒருவர் இருக்கும் வரை...

தவறுகளைத் தவறென சுட்டிக்காட்டித் திருத்தும் 

ஒருவர் இருக்கும் வரை...


துயர் அழுத்தும் கணங்களில் 

அருகிருந்து கண்ணீர்த்துடைக்க

ஒருவர் இருக்கும் வரை....

மனக்குறைகளைப் புலம்பித்தள்ளுகையில் காதுகொடுத்துக்கேட்க 

ஒருவர் இருக்கும் வரை

மட்டுமே...


வாழ்வு

ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றது..! 


பின்னும்

நாம்தான்

கையிலிருக்கும் 

பேரருள்களைக்

கொண்டாட 

மறந்து...

கை நழுவிய

கூழாங்கற்களுக்காய் 

ஏங்கிச்சாகிறோம்

இல்லையா...?!!


ஆம்,

உண்மையில்

நம்மை 

நமக்காகவே நேசிக்கும்..!

ஒருவரைத்தவிர

இந்த அற்ப வாழ்வினை

அற்புதமாக்க 

வேறெதனால் இயலும்..?!

சொல்..!! 


-ரிஸ்கா முக்தார்- 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.