மீன் பிரியாணி செய்வது எப்படி.!


தேவையான பொருள்கள்


1/2 கிலோ மீன்

1/2 கிலோ பாசுமதி அரிசி

3 தக்காளி

1 பெரிய வெங்காயம்

3 பச்சை மிளகாய்

1 எலுமிச்சம்பழம்

1/4 கப் தேங்காய்

1 கப் தேங்காய் பால்

1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்

1/4 மேஜைக்கரண்டி மல்லித் தூள்

1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்

1/4 மேஜைக்கரண்டி சோம்பு தூள்

1/2 மேஜைக்கரண்டி சோம்பு

5 துண்டு இஞ்சி

13 பூண்டு பல்

6 கிராம்பு

8 ஏலக்காய்

2 துண்டு பட்டை

1 பிரியாணி இலை

1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா

8 to 10 முந்திரி

எண்ணெய் தேவையான அளவு

நெய் தேவையான அளவு

மிளகாய் தூள் தேவையான அளவு

சிறிதளவு புதினா

சிறிதளவு கொத்தமல்லி


செய்முறை


முதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.


பின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.


இப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு bowl ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


பின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.


25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.


எண்ணெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.


அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.


எண்ணெய் சுட்டதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.


இவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.


வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.


இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.


இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.


அரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.


பின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.


2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.


இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.


பின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.


3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.


இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.


#JaffnaTrekker

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.