யாழ் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் விசாரணை?

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த


இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். 


" தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. இன்னிலையில் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டதுடன் , ஊடக சந்திப்பொன்றினையும் நடத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். 


அந்நிலையில் கடந்த வாரம், "விகாரையை இடிக்க வாரீர் " என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் குறித்த நாடாளுமற்ற உறுப்பினருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 


இந் நிலையில் யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன், தம்பித்துரை பிரதீபன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார் , ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன் , அவர்களிடம் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர் பின்னர் , குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.