சட்டவிரோத தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்!
”மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இது இனவாதக் கருத்தல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு, தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ‘தையிட்டி விகாரை விவகாரம் இன்று தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளது எனவம், மக்களின் காணி அவர்களுக்கே உரியது எனவும் ஆனால் இன்று அது மறுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீண்டகாலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த எமது மக்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும், அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர் எனவும் ஆனாலும் அது இதுவரை நிறைவேறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் வேறு சில பகுதிகளில் இந்துக் கோயில்கள் சில இன முரண்பாட்டை உருவாக்கும் என்ற தோரணையில் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் இந்த அரசு, இந்த விகாரையையும் இன முரண்பாட்டை உருவாக்கும் ஒன்றாக கருதி இடிப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாது விகாரையின் சுற்றுப்புறத்திலுள்ள வேறு சில மக்களின் காணி நிலங்களும் சட்டவிரோதமாக பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப் பகுதி மக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று பெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பல்சார் தரப்பினரிடமும் ஆதரவை கோரியுள்ளனர் எனவும், அம் மக்களின் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்க இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை