இந்திய தூதரகம் வடக்கு - கிழக்கு மற்றும் தமிழகத்தின் உறவை பலப்படுத்தும்!


நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை கொண்டதாகவும் இருக்கும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் மாவட்ட ஊடகவியலாளர்களை நேற்றையதினம் (22.02.2025) யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் வாஸ்த்துதலத்தில் நட்பு ரீதியாக சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – 


யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு இராஜதந்திர உறவுகளை முன்னெடுக்கும் கட்டமைப்பை கொண்டாதக மட்டுமல்லாது வடக்கு - கிழக்கு மற்றும் தமிழகத்தின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் எமது இந்த இந்திய துணைத் தூதரகம் இருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு இந்த துணைத் தூதரகத்தை நாம் இங்கு ஆரம்பித்தோம். 


வடக்கு மக்களுக்கு நாங்களே நிரந்தரமானவர்கள். பொருளாதார ரீதியான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதே எமது முக்கிய கடமையாக இருக்கும். குறிப்பாக வடக்கு மக்களுக்காகவும் இங்குள்ள மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவுமே யாழ்ப்பாணத்தில் இந்த தூதரகத்தை நாம் ஆரம்பித்தோம்.


இதேநேரம் கடந்த காலத்தில் இந்தியாவால் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. இதில், 47 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆயிரம் கொடுக்கப்படவுள்ளன. 


மேலும் இந்தியாவிலிருந்து பிரதமர் இங்கு வரும்போதோ அல்லது இலங்கையிலிருந்து ஜனாதிபதி ஒருவர் அங்கு செல்லும் போதோ அல்லது உயர்மட்ட சந்திப்புகளின் முடிவில் ஊடக வெளியீடுகளை பார்த்தால் அதில் இருக்கும் விடயங்கள் 75 முதல் 80 வீதமானவை வடக்கு தொடர்பானவையாகவே இருக்கின்றன.


இதேநேரம் நாம் மட்டுமே நிரந்தரமாக உங்களுடேனேயே இருக்கிறோம். வடக்கில் நாம் செயல்படுத்தும் சகல திட்டங்களையும் நாம் மானியமாகவே வழங்குகிறோம் என்று தெரிவித்திருந்ததுடன் நாம் நண்பர்களாக இருப்பதைவிட உடன் பிறந்த சகோதரர்களாக இருப்பதே சிறந்ததாகும். இதுவே உறவுகளையும் மேம்படுத்தும். சகோதரர்கள் என்றும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்காத சகோதரர்களாகவே இருப்பார்கள். நீங்கள் எந்நேரமானாலும் எமது கதவுகளை தட்டலாம். உங்களுக்காக எமது கதவுகள் என்றும் திறந்திருக்கும்.


அதனடிப்படையில் யாழ் இந்திய துணைத்தூதகமும் யாழ்ப்பாண ஊடகவியாளர்களும் சகோதரர்களாகவே இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறித்த நட்பு ரீதியான சந்திப்பின்போது யாழ் இந்திய துணைத்தூதுவராக அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாணத்தின் அதிகளவான ஊடகவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைப்பரிமாறிக் கொண்டதுடன் ஊடகவியலாளர்கள் தமது இதர புலமைகளை கலையுணர்வுடன் நிகழ்வுகளாக வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.