2ஆம் மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்!


வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீர் சாய்பு வீதியில் உள்ள வீடொன்றின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து காயமடைந்த சிறுவன் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


குறித்த சிறுவன் நேற்றுமுன்தினம் (13) தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 2 சிறுவர்களுடன் ஒரு கடைக்குச் சென்ற வேளையில், குறித்த கடைக்கு அருகில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் வாயில் கதவைத் தட்டியுள்ளதாகவும், அதற்காக கோபமடைந்த குறித்த வீட்டில் வசிக்கும் நபர் சிறுவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் தூக்கிச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள அறையொன்றில் அடைத்து வைத்துள்ளார்.


இதன் காரணமாக பயமடைந்த சிறுவன் குறித்த அறையின் ஜன்னலைத் திறந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்ததாக, முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுயுள்ள நிலையில் இதற்கு உதவியாக இருந்த 59 வயதுடைய நபரை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.